திருச்செந்தூர் முருகன் கோயிலில்! அமைச்சரிடமே ரூ 4000 பெற்று அர்ச்சகர்கள் முறைகேடு!
திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில், அர்ச்சகர்கள், விரைவு தரிசனத்திற்கு அழைத்து செல்வதாக கூறி இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷிடம் ரூ 4000 பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாஸ்க் அணிந்துக் கொண்டு அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு நடத்த சென்றிருந்தார். அப்போது அவரை யாரென தெரியாமல் அர்ச்சகர்கள் சிலர் அணுகினராம்.

விரைவு தரிசனம் செய்ய ரூ 4000 செலவாகும் என்றும் அதை கொடுத்தால் உடனே தரிசனத்திற்கு அழைத்து செல்வதாகவும் கூறினராம். இதையடுத்து தான் யாரென்று சொல்லாமல் அமைச்சரும், பணத்தை எப்படி செலுத்த வேண்டும் என கேட்டு, அதற்கு ஒரு ஜிபே எண்ணை அவர்கள் கொடுத்ததும் அதில் ரூ 4000-த்தை அமைச்சர் செலுத்தினார்.
இதையடுத்து மாஸ்க்கை கழற்றியதும்தான் அர்ச்சகர்கள், அச்சமடைந்தனர். இதையடுத்து கோயில் அலுவலகத்திற்கு சென்ற அவர் அங்கிருந்த கோப்புகளை பார்வையிட்டார். அப்போது நிறைய முறைகேடுகள் நடந்தது தெரியவந்தது.
இதையடுத்து கோயில் நிர்வாகிகளிடம் விளக்கக் கடிதம் எழுத கூறினார். இது போல் தன்னிடமே பணம் வசூலித்து முறைகேடு செய்ய முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரமேஷ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தொடர்ந்து பக்தர்கள் தரிசனம், அன்னதானம், அடிப்படை வசதிகள், சொத்துப் பதிவேடு விவரங்கள், திருப்பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள கோயிலுக்கு வர வேண்டிய வருவாய் போன்ற பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தி வருகிறோம்.
முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடு இன்றி விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தவெக ஆட்சியை கைப்பற்றியது.
அந்த வகையில் முதல்வர் விஜய் தலைமையில் 34 அமைச்சர்கள் பதவியேற்றனர். எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் இளைஞர்களை கொண்ட அமைச்சரவை உருவாகியுள்ளது.
துறை ஒதுக்கீடு செய்யப்பட்டதும் அவரவர் தினந்தோறும் ஆய்வு பணிகளை செய்து வருகிறார்கள். தவெக நிர்வாகிகள் எல்லாம் ஆய்வு செய்யும் கொடுமைகளும் நடந்து வருகின்றன.
இந்த அமைச்சரவையில் மிகவும் சர்ச்சையானது இந்து அறநிலையத் துறைதான். அதாவது பிராமண சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு இந்து அறநிலையத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது விமர்சனங்களுக்குள்ளானது. இவர் பல்வேறு கோயில்களுக்கு சென்று ஆய்வு செய்து பக்தர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
திருவண்ணாமலை கோயிலிலும் அவர் ஆய்வு நடத்தியிருந்தார். அங்கு பிரசாத கவுன்ட்டரில் பிரசாதங்களை ஆய்வு செய்து இந்த தின்பண்டங்கள் தயாரிக்கப்பட்ட தேதி குறிப்பிடப்படவில்லையே என அமைச்சர் கடிந்து கொண்டார்.
அது போல் திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விரைவு தரிசனத்திற்கு பணம் கொடுப்பதாக தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து ரமேஷ் மாஸ்க் அணிந்து கொண்டு கோயிலுக்குள் சென்றார். அப்போது அங்கிருந்த அர்ச்சகர் ஒருவரிடம் சுவாமி தரிசனம் செய்ய கட்டணம் எவ்வளவு என கேட்டுள்ளார்.
அதற்கு அந்த அர்ச்சகர் , ஒருவருக்கு ரூ 1000 என்றும் எத்தனை பேர் என கேட்டதற்கு ரமேஷ் 4 பேர் என்றும் தெரிவித்தாராம். அப்போது அந்த அர்ச்சகர் ஒரு ஜிபே நம்பரை கொடுத்து இதில் 4000 ரூபாய் பணத்தை அனுப்பிவிடவும் என கூறினாராம்.
இதையடுத்து ரமேஷும் அர்ச்சகர் சொன்ன நம்பருக்கு ரூ 4000 பணத்தை அனுப்பினாராம். இதையடுத்து கோயில் அலுவலகத்தில் ரமேஷ் ஆய்வு செய்த போது தரிசனத்திற்கு ரூ 1000 வாங்கியது குறித்து கடிந்து கொண்டார். அப்போதுதான் வந்தது அமைச்சர் என்றே தெரியாமல் அவரிடமே ரூ 4000 வாங்கியதும் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications