தடுப்பூசி போடவில்லையென்றால் கடைகளுக்கு சீல்...ஆணையர் உத்தரவால் அதிர்ந்த வியாபாரிகள
திருப்பத்தூர்: தடுப்பூசி போடவில்லையென்றால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று திருப்பத்தூர் நகராட்சி ஆணையர் ஏகராஜ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் விவேக் ஆகியோர் எச்சரித்தனர். இதனால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருப்பத்தூர் நகராட்சி ஆணையர் ஏகராஜ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் விவேக் மற்றும் நகராட்சி ஊழியர்கள் திருப்பத்தூர் பஜார் பகுதி, மார்க்கெட் பகுதிகளில் ஒலிப்பெருக்கி மூலம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வியாபாரிகள் முன்வரவேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் திருப்பத்தூர் நகராட்சி ஆணையர் ஏகராஜ் கூறும்போது, ''திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்து வரும் அனைத்து வகையான வியாபாரிகள், கடை உரிமையாளர்கள், கடைகளில் பணியாற்றி வரும் பணியாளர்கள் என அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தி, அதற்கான சான்றிதழைக் கையில் வைத்திருக்க வேண்டும். இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் செப்டம்பர் 11-ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்குள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கூட்டரங்கில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இம்முகாமில் வியாபாரிகள் தங்கள் ஊழியர்களுடன் கலந்துகொண்டு ஆதார் எண், செல்போன் எண்ணை வழங்கி 18 வயதைக் கடந்த அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். திங்கட்கிழமை முதல் நகராட்சி அதிகாரிகள் ஒவ்வொரு பகுதியாக ஆய்வுக்கு வரும்போது தடுப்பூசிப் போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை அவர்களிடம் வியாபாரிகள் காட்ட வேண்டும்.
இல்லையென்றால் அந்தக் கடையை மூடி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க ஒவ்வொரு வியாபாரியும் சமூக அக்கறையுடன், தங்களது பாதுகாப்பையும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும் உணர்ந்து கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவேண்டும். தடுப்பூசியால் எந்தப் பக்க விளைவும் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்" என்று நகராட்சி ஆணையர் ஏகராஜ் தெரிவித்தார்.
கேரளாவில் தீவிரமாக கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், இந்தியா முழுவதும் 3வது அலை கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. அக்டோபரில் கொரோனா உச்சம் பெறலாம் என்ற அச்சம் உள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தி உள்ளது. தமிழக அரசு மக்களிடையே தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மக்களை அதிகம் சந்திக்கும். வியாபாரிகள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.குறிப்பாக கடை வைத்துள்ளவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது. ஆனால் தடுப்பூசி போட இன்னமும் சிலர் மறுத்துவருகிறார்கள். இந்நிலையில் தடுப்பூசி போடவில்லையென்றால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று திருப்பத்தூர் நகராட்சி ஆணையர் ஏகராஜ் எச்சரித்துள்ளார்.