சுதந்திர சிங்கப்பூரில் பிறந்த முதல் பிரதமர்! யார் இந்த லாரன்ஸ் வோங்க்? ஒரு நேரடி ரிப்போர்ட்
கடந்த 20 ஆண்டுகளாகச் சிங்கப்பூரின் பிரதமராக இருந்த லீ சியென் லூங் அந்தப் பதவியிலிருந்து விலகிக் கொண்டுள்ளார்.
சிங்கப்பூரின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங்கிடம் கடந்த 15 ஆம் தேதி, லீ முறைப்படி ஆட்சியை ஒப்படைத்தார். இதன் மூலம் சிங்கப்பூர் வரலாற்றில் 59 ஆண்டுகளாகத் தொடர்ந்த லீ குடும்ப அரசியல் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது என்று சொல்கிறார்கள்.

இந்தப் புதிய பிரதமர் குறித்து அறிந்து கொள்வதற்காகவும் சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளாகப் பத்திரிகையாளராக பணியாற்றி வரும் கணியனிடம் பேசினோம்.
அவர் சிங்கப்பூரின் புதிய பிரதமர் பற்றியும் கள நிலவரம் பற்றியும் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
நம்மிடம் பேசிய கணியன், "சிங்கப்பூரின் 4வது பிரதமராக லாரன்ஸ் வோங்க் பதவியேற்றுள்ளார். கடந்த 15 ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெற்றது. 3வது பிரதமராக இருந்தவர் லீ சியென் லூங். சிங்கப்பூரின் முதல் பிரதமராக 1959 முதல் 1990 வரை லீ குவான் யூ தான் பதவி வகித்தார்.
அதன்பிறகு 1990 முதல் 2004வரை கோ சோக் டோங் இருந்தார். இவருக்கு அடுத்ததாக 2004 முதல் 2024 வரை லீ சியென் லூங் பதவி வகித்தார். இவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்தப் பதவியிலிருந்துள்ளார். இப்போது லாரன்ஸ் வோங்க் பதவியேற்றுள்ளார்.

கடந்த தேர்தலில் லீ சியென் லூங் தலைமையில் ஆளும் மக்கள் செயல் கட்சி தேர்தலைச் சந்தித்தபோது, 'எனக்கு இப்போதே 70வயதாகப் போகிறது. அடுத்த தேர்தலில் இளம் தலைவரிடம் ஆட்சியை ஒப்படைத்துவிடுவேன்' என்று லீ சியென் கூறியிருந்தார். ஆனால், பலரும் எதிர்பாராத அளவுக்கு ஒரு திடீர் மாற்றம் நடந்தது.
2019இல் கொரோனா நோய் உலகம் முழுவதும் பரவியது. அப்போது தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் நாடு இல்லை. ஆகவே தொடர்ந்து அவர் பதவியில் நீடிக்க வேண்டிய சூழல் உண்டானது.
சிங்கப்பூரின் வழக்கம் என்னவென்றால், யார் நிதியமைச்சராக இருக்கின்றாரோ அவர்தான் பெரும்பாலும் பிரதமர் பதவிக்கு வருவார்.
ஹெங் ஸ்வீ கீட் தான் நிதியமைச்சராக இருந்தார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது அவர் என்ன செய்தார் என்றால், சிங்கப்பூரின் எதிர்காலத்திற்கு நன்மை தரும் வலையில் நான்காம் தலைமுறையைச் சேர்ந்த தலைவர்களை உருவாக்க வேண்டும் என்று சொன்னார்.

அப்படி வரும் 4ஆம் தலைமுறை நிதியமைச்சராக வருபவரிடமே பிரதமர் பொறுப்பை ஒப்படைக்கலாம் என்றும் சொல்லி இருந்தார்.
அப்போதுதான் கொரோனா கொள்ளை நோய் பரவல் வந்தது. அப்போது ஒரு குழுவை நியமித்தார்கள். அந்தக் குழுவை வழிநடத்தும் பொறுப்பை லாரன்ஸ் வோங்க் செய்துவந்தார்.
இவருக்கு ஏற்கெனவே பல அமைச்சர்களை ஒருங்கிணைத்து வழிநடத்திய அனுபவம் இருந்ததால், அவர் பிரதமராவதற்கு ஆதரவு அதிகம் இருந்தது. ஆகவே, அவர் பிரதமராகவும் நிதியமைச்சராகவும் சிங்கப்பூரை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.
முன்பு இருந்த தலைவர்களிடம் இருந்து விலகி, தனித்துவமாக நாட்டை வழிநடத்த உள்ளதாக லாரன்ஸ் வோங்க் அறிவித்துள்ளார்.

சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்த தலைமுறையைச் சேர்ந்தவர்களில் முதல் பிரதமர் லாரன்ஸ் வோங்க். அவருக்கு முன்பாக வேறு யாரும் இல்லை.
இவர் ஆட்சிக்கு வந்த காலத்தில் பல நெருக்கடிகள் உள்ளன. உலகளாவிய அரசியல் நெருக்கடிகளிலிருந்து சிங்கப்பூரை அவர் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது.
அண்டை நாடுகளுடன் சுமுகமான ஒரு நட்பை உருவாக்க வேண்டிய தேவையும் உள்ளது. அதே நேரம் நாட்டின் தனித்துவத்தை விட்டுக் கொடுக்காமல் காக்க வேண்டிய கட்டாயமும் அவருக்கு முன் உள்ளது.
லாரன்ஸ் வோங்க் 1972இல் பிறந்தவர். அவருடைய தந்தை சீனாவிலிருந்து சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தவர். இவரது தாய் ஒரு பள்ளி ஆசிரியை. சிங்கப்பூரில் உள்ள தொடக்கப்பள்ளியில்தான் வோங்க் கல்வி கற்றார். அதன்பிறகு பட்டப்படிப்பை முடித்த பின்னர் ஃபைனாசியல் எக்ஸ்பர்ட் ஆக ஒரு வேலையில் சேர்ந்தார்.
அந்தக் காலத்தில் ஆசிய அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அப்போது சிங்கப்பூரை எப்படி அதிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதைப் பற்றி ஆய்வு செய்தார். தேசிய சுகாதார பராமரிப்பு கட்டப்பை மறுசீரமைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

அடுத்தகட்டமாக மூன்றாவது பிரதமர் லீ சியென் லூங் உடைய அந்தரங்கச் செயலாளர் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். வோங்க் 2011இல் தான் அரசியல் வாழ்க்கை ஏற்றார். இப்போது பிரதமராக புதிய பொறுப்புக்கு வந்துள்ளார்.
இவர் சிங்கப்பூரில் பதவியேற்ற காலத்தில்தான் உலகம் முழுவதும் ஏஐ தொழில்நுட்பத்தின் அசுர தாக்கம் உருவாகி உள்ளது. அதிலிருந்து நாட்டை எப்படி வழிநடத்தி, யாருக்கும் பாதிப்பு வராமல் கொண்டு செல்வது என்ற சவால் இவர் முன்பாக மிகப்பிரம்மாண்டமாக நிற்கிறது" என்கிறார்.












Click it and Unblock the Notifications