நக்சல் தொடர்பு: தர்மபுரியில் ஆயுதங்களுடன் கைதான 6 பேர் மீது தே.பா சட்டம் பாய்ந்தது!
தர்மபுரி : தர்மபுரியில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட 6 பேர் மீது தேசிய பாதுகாப்புச்சட்டம் பாய்ந்துள்ளது.
தர்மபுரியில் கடந்த 2012ம் ஆண்டு இருவேறு சமூகத்தைச் சேர்ந்த இளவரசன் - திவ்யா காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஜாதிக்கலவரம் ஏற்பட்டு வீடுகள் சூறையாடப்பட்டன. பின்னர் கடந்த ஆண்டு ஜூலை 4ம் தேதி இளவரசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இளவரசன் முதலாம் ஆண்டு நினைவு தினம் கடந்த வாரம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது ஆயுத பயிற்சி பெற்று வன்முறையில் ஈடுபட திட்டமிட்டு இருந்ததாக கூறி தர்மபுரி நத்தம் காலனியைச் சேர்ந்த சக்தி, துரை, சந்தோஷ், அதியமான். அசோக், சங்கர் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 3 பைப் வெடிகுண்டுகள், 2 நாட்டு துப்பாக்கிகள், இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிரான கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவர்கள் 6 பேரும் தர்மபுரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் இவர்கள் 6 பேர் மீதும் இன்று காலை தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.
இதன்படி இவர்கள் மேலும் ஒரு ஆண்டு காலத்திற்கு ஜெயியில் இருந்து விடுதலை ஆக முடியாது. கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க் பரிந்துரையின் பேரில் 6 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவில் மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் கையெழுத்திட்டார். 6 பேரிடமும் உத்தரவு நகல் விரைவில் சேலம் சிறையில் வழங்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications