எங்க, மழை பெய்யச் சொல்லி 'அம்மா' போட்ட ஆர்டரை காட்டுங்க.. கலெக்டரிடம் சமூக ஆர்வலர் மனு!
சேலம்: அம்மா உத்தரவுப்படி நல்ல மழை பெய்ததாகக் கூறிய சேலம் கலெக்டரிடம், உத்தரவின் நகலைக் கேட்டு சமூக ஆர்வலர் மனு செய்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளால், சென்னை உட்பட தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளமென ஓடுகிறது. ஏரிகள் நிரம்பியதால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், சேலம் கலெக்டரான சம்பத் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘அம்மா உத்தரவுப்படி சேலம் மாவட்டத்தில் நல்ல மழை பெய்துள்ளது' எனத் தெரிவித்தார். கலெக்டரின் இந்தப் பேச்சு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவியது.
கலெக்டரின் இந்தப் பேச்சு கடும் விமர்சனத்திற்கும், கிண்டலுக்கும் ஆளானது. அதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கோ.ரா.ரவி என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சேலம் கலெக்டருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், 'உங்கள் பேட்டியை, 'டிவி'யில் பார்த்தேன். முதல்வர் உத்தரவின் படி மழை பெய்ததாக தெரிவித்துள்ளீர்கள். அதற்கான முதல்வரின் உத்தரவு நகலை தாருங்கள்' என ரவி கேட்டுள்ளார்.
ரவியின் இந்தக் கேள்விக்கு, கலெக்டர் சம்பத் என்ன பதில் அளிக்கப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.