கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் - சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னையில் கைது
சென்னை : தன்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக வீரமணி என்பவர் அளித்த புகாரின் பேரில் டிராபிக் ராமசாமியை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
டிராபிக் ராமசாமி என அழைக்கப்படும் கே.ஆர்.ராமசாமி பிரபலமான பொதுநலச்சேவகர் ஆவார். போக்குவரத்து நெரிசலான சாலைகளில் தானே களமிறங்கி, அவற்றை சீர் செய்ததால் அவருக்கு ‘டிராபிக்' ராமசாமி எனப் பெயர் உண்டாயிற்று.
பொதுமக்கள் நலன் கருதி, பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து பல நல்ல செயல்களுக்கு வித்திட்டவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

இந்நிலையில், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தன்னைத் தாக்கியதாக வீரமணி என்பவர் சென்னை வேப்பேரி காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
அப்புகாரில், ‘புரசைவாக்கம் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நின்று கொண்டு டிராபிக் ராமசாமி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி கொடுத்ததாகவும், அதைத் தட்டிக் கேட்டபோது, தனது கார் கண்ணாடியை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வீரமணி தெரிவித்திருந்தார்.
இதையொட்டி டிராபிக் ராமசாமி மீது கொலை மிரட்டல், அவதூறாக பேசுதல், காரை உடைத்தல் உள்ளிட்ட 4 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாண்டி பஜாரில் விடுதி ஒன்றில் தங்கி இருந்த டிராபிக் ராமசாமியை, வேப்பேரி இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார், இன்று அதிகாலை கைது செய்தனர். பின்னர் சைதாப்பேட்டையில் உள்ள எழும்பூர் 14-வது குற்றவியல் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு கயல்விழி முன்பு டிராபிக் ராமசாமியை ஆஜர்படுத்தினர்.
அவரை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு கயல்விழி உத்தரவிட்டார். இதையடுத்து டிராபிக் ராமசாமி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications