தேர்தல் கணிப்பு மக்கள் மனநிலையை மாற்ற முயற்சி: தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: தேர்தல் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் மக்கள் மனநிலையை மாற்ற முயற்சி செய்துள்ளார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக லயோலா கல்லூரி கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. தமிழகத்தின் 28 மாவட்டங்களில் 80 சட்டசபை தொகுதிகளில் கடந்த 13-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 3,320 பேரிடம் இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
அந்தக் கருத்துக்கணிப்பின் முடிவின்படி தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் மீண்டும் அதிமுக வெல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அதில், பாஜகவும், பாமகவும் 3 சதவீத மக்கள் ஆதரவைப் பெற்று சமபலத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கருத்துக்கணிப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
குறுகிய வட்டம்...
தற்போது வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கணிப்பு குறுகிய வட்டத்துக்குள் சிலரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இதன் முடிவு நம்ம முடியாது. சிலரது இமேஜை உயர்த்த திட்டமிட்டு வெளியிட்ட கருத்துக்கணிப்பாகவே தோன்றுகிறது.
மனநிலையை மாற்ற முயற்சி...
மக்கள் ஆராய்ந்து முடிவு செய்ய இன்னும் காலம் இருக்கிறது. ஆனால் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் மக்களின் மனநிலையை மாற்ற முயற்சி செய்துள்ளார்கள்.
இளங்கோவன் பிரச்சினை...
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தான் செய்த தவறுக்காக மதுரையில் தங்கி இருந்து கையெழுத்து போடுகிறார். அதை ஏதோ சாதனை செய்தது போல் முன்னிலைப்படுத்துவது தவறு. இனியாவது யாரும் வரம்பு மீறி பேசக்கூடாது என்பதை உணர வேண்டும்.
கார்த்தி சிதம்பரம்...
கார்த்திக் சிதம்பரம் மீது ஊழல் புகார் கூறப்பட்டதை திட்டமிட்ட பழிவாங்கும் செயல் என்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியின் போதும் அவர் மீது ஊழல் புகார் எழுந்தது. ஆனால் அமுக்கிவிட்டார்கள். தன் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் புகார் பற்றி கார்த்தி சிதம்பரம் தெளிவுபடுத்த வேண்டிய நிலையில் உள்ளார்.
காற்றாலை மின்சாரம்...
தமிழகத்தில் காற்றாலை மின்சாரம் அதிக அளவில் கிடைக்கிறது. இதற்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.3.50தான் செலவாகும். 11 ஆயிரத்து 500 காற்றாலைகள் இயங்கியது. அதில் பாதியை இயங்கவிடாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.
கூடுதல் விலை...
வெளி மாநிலங்களில் இருந்து கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்குகிறார்கள். இது மக்கள் மீதுதான் சுமையை ஏற்றும். இதே போல் ஒவ்வொரு துறையும் சீரமைக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.
மோடி- ஜெ. சந்திப்பு...
பிரதமர் மோடி-முதலமைச்சர் ஜெயலலிதா சந்திப்பினால் குறைகளை தட்டி கேட்க மாட்டோம் என்று சொல்ல முடியாது. அந்த சந்திப்பு மக்கள் நலன் சார்ந்தது.
குறைகளைத் தட்டிக் கேட்போம்...
நிறைகள் இருந்தால் பாராட்டுவோம். குறைகள் இருந்தால் நிச்சயம் பா.ஜனதா தட்டி கேட்கும். சில இடங்களில் காவல் துறைக்கு எதிராகவே மக்கள் போராடும் நிலையில் உள்ளனர். இதற்கான பிரச்சினைகளை கண்டறிந்து முளையிலேயே களைய வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.