மேலும் 100 ரயில்களில்‘பிரீமியம் ‘தட்கல்’ அறிமுகம்.. ஆனால் டிக்கெட் கட்டணம் தான் கண்ணை கட்டுது
சென்னை: தெற்கு ரயில்வே மேலும் 100 ரயில்களில் பிரீமியம் தட்கல் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. சாதாரணமாக பயணம் செய்யும் கட்டணத்தை விட 3 மடங்கு அதிகமாகும்.
தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் ரயில்களில் பயணிக்க, 'ப்ரீமியம் தட்கல் டிக்கெட் திட்டம்' மூலம் ரயில் டிக்கெட்டை பயணிகள் முன்பதிவு செய்வது வழக்கம்.
குறைந்த எண்ணிக்கையிலான ரயில்களில் மட்டுமே இந்த திட்டம் இதுவரை செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், தெற்கு ரயில்வே எந்தவித முன்னறிவிப்பின்றி 100 ரயில்களில் பிரிமியம் தட்கல் கட்டணத்தை அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஏப்ரல் 29-ந் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
சென்னையிலிருந்து மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸில், சாதாரணமாக படுக்கை வசதிக்கு டிக்கெட் கட்டணம் 315 ரூபாயாக உள்ள நிலையில், பிரிமீயம் தட்கல் முன்பதிவில் இது 900 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் மெயில், கிராண்ட்டிராங்க் எக்ஸ்பிரஸ் உள்பட 100 எக்ஸ்பிரஸ் ரயில்களில் இது அறிமுகம் ஆகி உள்ளது. இதன் மூலம் மொத்தம் 125 ரெயில்களில் பிரீமியம் தட்கல் முறை உள்ளது. 30 சதவீதம் தட்கல் முறையில் உள் ஒதுக்கீடாக 15 சதவீதம் பிரீமியம் தட்கல் முறைக்கு ஒதுக்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிரிமீயம் தட்கல் திட்டத்திற்கு, தட்கல் டிக்கெட்டுகளில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால், பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.