ரயில் படிக்கெட்டில் பயணம் செய்யும் ரோமியோக்களுக்கு செக்... பாஸ் ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே
ரயில் படிக்கட்டகளில் பயணம் செய்யும் மாணவர்களின் பயண அட்டை ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை : ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களின் பயண அட்டை ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு செல்லும் மாணவர்களை வீடியோ எடுத்து அவர்கள் சார்ந்த கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி நாட்களில் மற்ற பயணிகளுக்கு மிகப்பெரும் தொந்தரவாக இருப்பது பேருந்தாக இருந்தாலும், ரயிலாக இருந்தாலும் மாணவர்கள் படியிலேயே நின்று கொண்டு பயணம் செய்வது. பள்ளி செல்லும் போதே இந்த பழக்கத்தை வளர்த்துக் கொள்ளும் மாணவர்கள் இதை ஒரு ஜாலியான விஷயமாக பார்க்கின்றனர்.

ஆனால் பல சமயங்களில் அது பேராபத்தைத் தான் தருகிறது. ஒன்று அவர்களால் மற்றவர்களுக்குத் தொல்லை இல்லையென்றால் மாணவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடுகிறது. இதனை தடுக்க எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும் மாணவர்களின் படிக்கட்டு பயணங்களை இன்னும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
ஆபத்தான பயணம் இது என்று மாணவர்களிடம் யாராவது எடுத்துச் சொன்னால் போதும். அதோடு முடிந்தது கதை சென்னை போன்ற பெருநகரங்களில் மாணவர்களின் வசவு வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியாது.
மின்சார ரயில்களிலும் இதே நிலை தான். இதனால் விபத்துகளை தடுக்கும் விதமாக தெற்கு ரயில்வேயும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் படிக்கட்டுகளில் பயணம் செய்ததற்காக சுமார் 7 ஆயிரத்து 627 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே கோட்ட பாதுகாப்பு ஆணையர் லூயிஸ் அமுதன் தெரிவித்துள்ளார்.
ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பயண அட்டையை ரத்து செய்யலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக லூயிஸ் கூறியுள்ளார். மேலும் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களை வீடியோ எடுத்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் லூயிஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications