மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 'அம்மா'வுக்காக யாகம் நடத்தியும்....
மதுரை: ஜெயலலிதா விடுதலையாகி வர வேண்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. ஆனால் இன்று ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுவிட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 27ம் தேதியில் இருந்து ஜெயலலிதா சிறையில் உள்ளார்.

அவரை சிறையில் அடைத்ததில் இருந்து அதிமுகவினர் தமிழகத்தில் உண்ணாவிரதம், கடையடைப்பு என தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஜெயலலிதா விடுதலையாகி வெளியே வர மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திங்கட்கிழமை சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடந்த யாகத்தில் 70 சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர். காலை 7 மணி முதல் 9 மணி வரை நடந்த யாகத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு, அவரது மனைவி ஜெயந்தி, மேயர் ராஜன்செல்லப்பா, டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜக்கையன், கோபாலகிருஷ்ணன் எம்.பி. உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
மேலும் தல்லாகுளத்தில் உள்ள பெருமாள் கோவிலில் அதிமுக இளைஞர் அணி சார்பில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதிலும் அமைச்சர் செல்லூர் ராஜு, மேயர் ராஜன்செல்லப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது தவிர மதுரையின் பல்வேறு பகுதிகளில் பேரணி, உண்ணாவிரதப் போராட்டம் ஆகியவையும் நடத்தப்பட்டன. இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.












Click it and Unblock the Notifications