சுவாதிக்கு நடந்தது போல நமக்கும் நடக்கலாம்... அஞ்சலி செலுத்தியவர்கள் ஆதங்கம்
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட இடத்தில் ஏராளமான ஐடி நிறுவன ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். உறவினர்கள், பொதுமக்களும் இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சுவாதிக்கு நடந்தது போல் நாளைக்கு நம்மில் ஒருவருக்கு கூட நடக்கலாம். இனிமேல் வருங்காலத்தில் இதுபோல் ஒரு சம்பவத்தை நடக்க விடக்கூடாது என்று அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சுவாதி, 25 கடந்த வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையில் மர்மநபர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார். சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இந்த படுகொலை சம்பவம் அதிர்ச்சியலைகளை உருவாக்கியது.
கொலையாளியைப் பற்றி சரியான தகவல்கள் கிடைக்காத நிலையில் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் கொலையாளி அடையாளம் காணப்பட்டுள்ளார். 5 தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளியை தேடி வருகின்றனர்.
இதனிடையே சுவாதி படுகொலை செய்யப்பட்ட நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அறிவுசார் தொழில் செய்பவர்களின் கூட்டமைப்பினர் சார்பில் நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன், சித்தப்பா கோவிந்தராஜன் மற்றும் ஐ.டி. நிறுவன ஊழியர்கள், பயணிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொருவரின் கையிலும் மெழுகுவர்த்தி மற்றும் சுவாதியின் படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். சுவாதி கொலை செய்யப்பட்ட போது அந்த சமயத்தில் அருகில் இருந்தவர்கள் எந்த உதவியும் செய்யாததை எடுத்துக்கூறும் வகையில், நாம் என்ன காது கேளாதவர்களா? வாய் பேச முடியாதவர்களா? என்ற வாசகங்களை சிலர் கையில் வைத்து இருந்தனர்.
சுவாதி கொலை சம்பவம் நடந்த போது ரயில் நிலையத்தில் 30 பயணிகள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. இது வேதனைக்குரிய சம்பவம் என்று அறிவுசார் தொழில் செய்பவர்களின் கூட்டமைப்பில் (கே.பி.எப்.) தலைவர் அழகு நம்பி வெல்கின் தெரிவித்தார்.
சுவாதிக்கு நடந்தது போல் நாளைக்கு நம்மில் ஒருவருக்கு கூட நடக்கலாம். இனிமேல் வருங்காலத்தில் இதுபோல் ஒரு சம்பவத்தை நடக்க விடக்கூடாது. ஐ.டி. நிறுவனத்தில் வேலைபார்ப்பவர்களுக்கு பொருளாதாரத்தில் உயர்வு இருந்தாலும், பாதுகாப்பு என்பது இல்லை.
எனவே ஐ.டி. நிறுவன ஊழியர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அரசிடம், தொழிலாளர் நல ஆணையத்திடமும் ஐ.டி. நிறுவன ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிக்கை விடுத்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். .