2 முறை உடைந்து.. 2 முறை சின்னத்தை இழந்து.. 2 முறை இணைந்த ஒரே கட்சி அதிமுக!
2 முறை உடைந்து, 2 முறை இரட்டை இலை சின்னத்தை இழந்து, 2 முறை மீண்டும் இணைந்த ஒரே கட்சி அதிமுகதான்.
சென்னை: இரண்டு முறை உடைந்து, 2 முறையும் தனது இரட்டை இலை சின்னத்தை இழந்து, 2 முறையும் மீண்டும் இணைந்த ஒரே கட்சி இந்தியாவிலேயே அதிமுக மட்டும்தான்.
ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர், அதிமுகவில் பிளவுகள் ஏற்பட்டன. நீண்ட இழுபறி பேச்சுக்கு பின்னர் சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இன்று இணைந்துள்ளன.
ஏற்கனவே இதேப் போன்று ஒருமுறை அதிமுக உடைந்து பின் மீண்டும் இணைந்த வரலாறு அதிமுகவிற்கு உண்டு.
உடைப்பு
1987ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் மற்றும் அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர் உடல் நலமின்றி மரணம் அடைந்த போது அதிமுக இரண்டாக உடைந்தது. எம்ஜிஆரின் மனைவி ஜானகி எம்ஜிஆர் தலைமையில் ஒரு அணியும், அப்போது கொள்கைப் பரப்பு செயலாளராக இருந்த ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும் என இரண்டாகக் கட்சி உடைந்தது.
Recommended Video
சேவலும் புறாவும்
அப்போது, கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சேவல் அணியாகவும் இரட்டைப் புறா அணியாகவும் பிரிந்து நின்று, ஜெயலலிதாவும் ஜானகி எம்ஜிஆரும் தேர்தலைச் சந்தித்தனர்.
இணைப்பு
இதில் இரண்டு அணியும் தோல்வி அடைந்தது. அதன் பிறகு இரண்டு அணிகளும் முறைப்படி பேச்சுவார்த்தை நடத்தி இணைந்தனர். அதன் பிறகு இரட்டை இலை மற்றும் அதிமுக கட்சி என அனைத்தும் ஜெயலலிதா தலைமையின் கீழ் ஒன்றிணைந்தது.
மீண்டும் உடைப்பு
இதே நிலைமை ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதி இறந்த பின்னர் உருவானது. ஓபிஎஸ் அணியாகவும் சசிகலா அணியாகவும் பிரிந்த கட்சி 6 மாதத்தில் சசிகலாவை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டு, இரண்டு அணிகள் மட்டுமே இருப்பதான தோற்றம் உருவானது.
இரட்டை இலை முடக்கம்
மேலும், இந்த இரு அணிகளும் இரட்டைச் சின்னம் மற்றும் கட்சியின் பெயரைச் சொந்தம் கொண்டாடியதால் தலைமை தேர்தல் ஆணையம் கட்சியின் பெயர் மற்றும் இரட்டைச் சின்னத்தை முடக்கியது. இதனால் இந்த இரு அணிகளும் அதிமுக அம்மா அணி என்றும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என்றும் இயங்கி வருகின்றன.
மீண்டும் இணைப்பு
இதனையடுத்து, இரண்டு அணிகளும் எப்படியாவது இணைந்துவிட வேண்டும் என்ற முயற்சிகள் நடந்து கொண்டே இருந்த நிலையில், இறுதியில் இன்று இணைந்தே விட்டன. இதனால் உடைந்த கட்சி 2வது முறையாக மீண்டும் இணைந்து வரலாறு படைத்துள்ளது அதிமுக. இதனைத் தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தையும் அதிமுக மீண்டும் பெற்றுவிடும்.