இந்து துறவி விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்குள் அனுமதிக்க கூடாது.. வீரமணி போர்க்கொடி
சென்னை: இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியோடு சம்பந்தப்படுத்தி விவேகானந்தர் ரதங்கள் பள்ளிகளுக்குச் செல்லுவது என்பது அனுமதிக்கத் தகுந்ததுதானா? ஏற்கத் தகுந்ததுதானா? என்று திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக மயிலாப்பூரில் விவேகானந்தர் ரத பூஜையுடன் 25 ரதங்களுக்கு சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. சென்னையிலிருந்து புறப்பட்ட 25 ரதங்கள் அரசு, தனியார் பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய பாஜக என்னும் இந்துத்துவா ஆட்சியோடு, தமிழ்நாடு அரசும் கைகோத்துக் கொண்டு விட்டதா? இது மதச் சார்பற்ற அரசின் தன்மைக்கு விரோதமானதல்லவா? தமிழக முதல்வர் இதன் மீது கவனம் செலுத்தி மதச்சார்பின்மையைப் பாதுகாக்க முன் வருவாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக திராவிடக் கழகத் தலைவர் கி வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிக்கை:

ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி
இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக மயிலாப்பூரில் விவேகானந்தர் ரத பூஜையுடன் 25 ரதங்களுக்கு சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. சென்னையிலிருந்து நேற்று இரவு 9 மணிக்கு புறப்பட்ட 25 ரதங்களும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளுக்குச் செல்லுகின்றன என்ற செய்தி வந்துள்ளது.

இது தகுந்தது தானா?
இந்து மதத்தை அமெரிக்காவரை சென்று பரப்பியவர் என்று புகழப்படுபவர் விவேகானந்தர். இப்பொழுது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியோடு சம்பந்தப்படுத்தி விவேகானந்தர் ரதங்கள் பள்ளிகளுக்குச் செல்லுவது என்பது அனுமதிக்கத் தகுந்தது தானா? ஏற்கத் தகுந்ததுதானா?

ஆபத்தான செயல் அல்லவா?
மாணவர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட மதச் சிந்தனையை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமா? இந்துத்துவா பெயரில் நாட்டில் ஆங்காங்கே மதக் கலவரங்களை விசிறி விட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், மாணவர்கள் மத்தியிலும் இத்தகைய சிந்தனைகளைத் தூண்டுவது ஆபத்தான செயல் அல்லவா?

மதச் சார்பற்ற அரசுக்கு எதிரானது
மத்திய பாஜக என்னும் இந்துத்துவா ஆட்சியோடு, தமிழ்நாடு அரசும் கைகோத்துக் கொண்டு விட்டதா? இது மதச் சார்பற்ற அரசின் தன்மைக்கு விரோதமானதல்லவா? தமிழக முதல்வர் இதன் மீது கவனம் செலுத்தி மதச்சார்பின்மையைப் பாதுகாக்க முன் வருவாரா? விவேகானந்தர் ரதம் ஊர்வலத்தைத் (குறைந்தபட்சம் பள்ளிகளுக்குச் செல்வதையாவது) தடுப்பாரா? எங்கே பார்ப்போம்!.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications