எஸ்.ஆர்.எம் பெயரை பயன்படுத்தி பண மோசடி.. மதன் மீது கமிஷனர் ஆபீசில் பாரிவேந்தர் புகார்
சென்னை: எஸ்.ஆர்.எம். குழும பெயரை பயன்படுத்தி பெரும் பண மோசடி செய்த மதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அக்குழும தலைவர் பாரிவேந்தர் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வேந்தர் மூவிஸ், மதன் திடீரென மாயமான விவகாரத்தில் பாரிவேந்தருக்கு தொடர்புள்ளதாக சர்ச்சை வெடித்த நிலையில், இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து கூற அதை பாரிவேந்தர் மறுத்து பதிலுக்கு குற்றச்சாட்டை சுமத்த என விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு நடந்ததாக கூறி மாணவர்கள் சிலர் போராட்டம் நடத்தி சூட்டை கூட்டினர்.
இந்நிலையில், பாரிவேந்தர் சார்பில், சென்னை போலீஸ் கமிஷனரிடம் வழக்கறிஞர் வி.பாலு என்பவர் இன்று மனு ஒன்றை அளித்தார்.
பண மோசடி செய்து எஸ்.ஆர்.எம். குழுமத்திற்கு மதன் கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளார். எஸ்.ஆர்.எம். குழும பெயரை பயன்படுத்தி மதன் பணமோசடி செய்துள்ளார். மதன் மீதான பண மோசடி புகார் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.