குமரி முதல் சென்னை வரை யாத்திரைக்கு தயாராகும் மு.க. ஸ்டாலின்
குமரி முதல் சென்னை வரை மிகப்பிரம்மாண்டமான யாத்திரைக்கு தயாராகி வருகிறார் மு.க.ஸ்டாலின்
சென்னை: மக்களை சந்திக்க தயாராகி வருகிறார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். கன்னியாகுமரி முதல் சென்னை வரை மிகப்பெரிய யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக 2015ஆம் ஆண்டு 'நமக்கு நாமே' என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்தார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.
அப்போதய ஆளும் கட்சிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரச்சாரம் செய்தார். ஆட்சிக்கு வர முடியாவிட்டாலும் 89 இடங்களில் வெற்றி பெற்று வலுவான எதிர்கட்சியாக திமுக வெற்றி பெற்றது.
சட்டசபை எதிர்கட்சித்தலைவர்
சட்டசபை எதிர்கட்சித்தலைவராக பதவியேற்றுள்ள ஸ்டாலினின் செயல்பாடுகள் பற்றி பல விமர்சனங்கள் எழுகின்றன. அதே நேரத்தில் அவர் எதிர்கட்சித்தலைவராக சிறப்பான முறையில் செயல்படுவதாகவே திமுகவினர் கூறுகின்றனர்.
லோக்சபா, சட்டசபை தேர்தல்
2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதே போல தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கலையலாம், தேர்தல் வரலாம் என ஸ்டாலின் நினைக்கிறார். அதனால், மறுபடியும் தமிழகம் முழுக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்திக்கத் தயாராகி வருகிறார்.
சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் ஸ்டாலின்
நமக்கு நாமே என்ற பெயரில் ஏற்கனவே சுற்றுப்பயணம் சென்றது போல இந்த முறை குமரி முதல் சென்னை வரை பயணிக்க திட்டமிட்டுள்ளார். யாத்திரை என பெயர் வைக்கலாமா என டிஸ்கஷன் நடந்துவருகிறது,
ஸ்டாலின் பயணத்திட்டம்
கன்னியாகுமரியில் தொடங்கி திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, சேலம், தர்மபுரி, வேலூர், சென்னை பயணம் முடிகிறது. பயணத்தில், ஆங்காங்கே பொதுக்கூட்டங்கள் நடக்கும். முக்கிய பொதுக்கூட்டங்களில் ஸ்டாலின் பேசுவார் ஸ்டாலினின் யாத்திரை பயணத் திட்டம் விரைவில் வெளியாகும்.
வெற்றி வாகை சூடுவாரா?
கடந்த 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. தருமபுரி, நாகர்கோவில் தவிர அதிமுகவே அத்தனை இடங்களையும் அதிமுகவே அள்ளியது. 2016 சட்டசபை தேர்தலிலும் பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியது அதிமுக. இம்முறை ஜெயலலிதா என்ற ஆளுமை இல்லை என்பதால் சட்டசபை, லோக்சபா தேர்தலில் அதிக இடங்களை வெல்ல இப்போதே திட்டமிட்டு வருகிறார் ஸ்டாலின். வெற்றி வாகை சூடுவாரா? வாக்காளர்கள் கையில் உள்ளது.