வெள்ளப் பாதிப்புக்கு மத்திய அரசிடம் நிதி கேட்பதை ஜெயலலிதா தாமதப்படுத்துகிறார்:ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு மத்திய அரசிடம் நிதி கேட்பதை ஜெயலலிதா தாமதப்படுத்துகிறார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வரும் ஸ்டாலின் இன்று தனது கொளத்தூர் தொகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். அப்போது வெள்ளத்தால் பாதிப்படைந்த 2500 பேருக்கு தலா ஒரு பெட்சீட், 5 கிலோ அரிசி, பால் மற்றும் பிரட் பாக்கெட்டுகளை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது மழை பொழிவது ஓரளவிற்கு குறைந்துள்ளது. ஆனாலும் மக்கள் இன்னும் வேதனையில் தான் உள்ளனர். குடியிருப்பு பகுதிகளிலும்,வீடுகளிலும் இன்னும் தண்ணீர் தேங்கி நின்றபடியே தான் உள்ளது. மக்கள் இன்னமும் பல்வேறு துன்பத்திற்கு ஆளாகி அமர்ந்திருக்கிறார்கள்.
தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் போதிய நிவாரணப் பணிகளில் முனைப்புடன் ஈடுபடவில்லை. மாநகராட்சி அதிகாரிகளோ, அரசு அதிகாரிகளோ, அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களோ, அதே போல அமைச்சர்களாக இருப்பவர்களும் மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் போடும் போது கூட முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை கூட்ட அரங்கத்தின் மேசைகளில் வைத்து, தொலைக்காட்சி, பத்திரிக்கைகளில் எல்லாம் அவருடைய படம் வர வேண்டும் என்பதிலே தான் கவனமாக இருக்கிறார்களே தவிர, நிவாரண நடவடிக்கைகளில் முழுமையாக எந்தவித அக்கறையும் இதுவரையிலும் காட்டவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்றாக அமைந்திருக்கிறது.
ஏற்கெனவே கட்சிப் பாகுபாடின்றி திமுக தன்னுடைய முழு ஆதரவையும் இந்த அரசுக்கும், ஆங்காங்கே இருக்க கூடிய உள்ளாட்சித்துறை அமைப்புகளுக்கும், மாநகராட்சிக்கும் வழங்கும் என்று பலமுறை அறிக்கைகள் வாயிலாக வெளியிட்டிருந்தாலும் கூட, இதுவரையிலும் மாநகராட்சியும், இந்த அரசாங்கமும் அதனை முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
முதலமைச்சர் ஜெயலலிதா பெயருக்காக ஏதோ தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வது, கோட்டைக்கு சென்று புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துவிட்டு செல்வது போல, ஒரு அரை மணி நேரம் மட்டும் மழை வெள்ளப் பணிக்காக வந்து சென்றார். அப்படி வந்த போது கூட, தனது கட்சியினரை பார்த்து வாக்காளப் பெருமக்களே என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறாரே தவிர மக்கள் பணியை மக்களின் குறைகளை அவர் கேட்கவில்லை. அதன் பிறகு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அறிவிப்பு வெளியிட்டாரே தவிர அதன் பிறகு அதற்கான முயற்சியில் இதுவரை அவர் ஈடுபடவில்லை.
எதற்கெடுத்தாலும் பிரதமருக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்க கூடிய முதலமைச்சர் ஜெயலலிதா இதுவரையில் இந்த மழை வெள்ளத்தைப் பற்றி பிரதமருக்கோ அல்லது மத்திய அரசுக்கோ அல்லது சம்மந்தப்பட்ட துறையினுடைய மத்திய அமைச்சர்களுக்கோ கடிதமும் எழுதவில்லை தொலைபேசியில் ஒருமுறை தொடர்பு கொண்டு கூட பேசவில்லை. உள்ளபடியே இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஒருவேளை இவர் இதன் பிறகு நிதியை கேட்டு, அதனை மத்திய அரசு இப்போது ஒதுக்காமல் காலம் கடந்து ஒதுக்கினால், அந்த நிதியை தேர்தல் நேரத்திலே தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஒருவேளை ஜெயலலிதா திட்டமிட்டுக் கொண்டிருக்கிறாரோ என்ற எண்ணம் தான் இன்றைக்கு மக்களுக்கு வந்திருக்கிறது.