பிணம் தின்னும் கழுகுகள் போல் ஓபிஎஸ் அணியினர் தேர்தல் பிரசாரம்: ஸ்டாலின் தாக்கு
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மருது கணேசை ஆதரித்து அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.
சென்னை: பிணம் தின்னும் கழுகுகளைப் போல் ஓபிஎஸ் அணியினர் தேர்தல் பிரசாரம் செய்து வருவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் 62 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் அதிமுக இரு அணிகளாக பிரிந்து போட்டியிடுகிறது. அதிமுக அம்மா அணி வேட்பாளராக டிடிவி தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிடுகிறார். ஓபிஎஸ் அணி வேட்பாளராக மதுசூதனன், இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்தில் போட்டியிடுகிறார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா படகு சின்னத்தில் போட்டியிடுகிறார்.
திமுகவின் மருதுகணேன், தேமுதிகவின் மதிவாணன், பாஜகவின் கங்கை அமரன், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லோகநாதன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆர்.கே.நகரில் இன்று மாலை பிரசாரத்தை தொடங்கியுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திறந்த ஆட்டோவில் வீதி வீதியாக சென்று அவர் வாக்கு கேட்டு வருகிறார்.
வாகனங்கள் செல்ல முடியாத இடங்களில் நடந்தே சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார் ஸ்டாலின். பிரசாரத்தின் இடையே பேசிய ஸ்டாலின், திமுக விரைவில் ஆட்சிக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது என்று கூறினார்.
மேலும், மணல் மாஃபியாவுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது ஓபிஎஸ் அதிமுக அணி என்றும் பிணம் தின்னும் கழுகுகள் போல் ஓபிஎஸ் அணியினர் தேர்தல் பிரசாரம் செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.