இந்தியா டுடே மாநாட்டில் மோடியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்!
இந்தியா டுடே மாநாட்டில் கலந்து கொண்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடியின் ரூபாய் மதிப்பு ரத்து நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார். மோடி திடீரென வெளியிட்ட ரூபாய் நோட்டு அறிவிப்பு மக்களை பெரும்
சென்னை: இந்தியா டுடே மாநாட்டில் பேசிய தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடியின் ரூபாய் மதிப்பு ரத்து நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார். மோடி திடீரென வெளியிட்ட ரூபாய் நோட்டு அறிவிப்பு மக்களை பெரும் துயரில் தள்ளியதாகவும் அவர் கூறினார்.
தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் இந்தியா டுடே குழுமத்தின் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அப்போது தமிழகத்தின் நலனுக்கு எது நல்லது? வளர்ச்சி திட்டங்களா? இலவசமா என்ற தலைப்பில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் உரையாற்றினார். இலவசங்கள் அர்த்தமுள்ள முதலீடுகள் என்று கூறிய ஸ்டாலின், மக்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை போக்கவே இலவசங்கள் வழங்கப்படுவதாக கூறினார்.
இதைத்தாடர்ந்து பேசிய ஸ்டாலின் மாநாட்டு மேடையிலேயே பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்தார். மோடியின் ரூபாய் நோட்டு திட்டத்தை முதலில் வரவேற்றது திமுக தான் என்று கூறிய அவர், இதனால் மக்கள் பட்ட வேதனையை கண்டு முதலில் கண்டனம் தெரிவித்ததும் திமுக தான் என்றார்.
எந்த திட்டமிடலும் இல்லாமல் பிரதமர் மோடி அவசரஅவசரமாக ரூபாய் நோட்டு மதிப்பு ரத்து அறிவிப்பை வெளியிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். இதுபோன்ற வளர்ச்சித் திட்டங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவாது என்றும் ஸ்டாலின் விமர்சித்தார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு மக்களை துயரில் தான் தள்ளியது என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.