தமிழகத்தில் நடப்பது ஜெயலலிதாவின் ‘வெத்து அனவுன்ஸ்மெண்ட்’ ஆட்சி: ஸ்டாலின்
சென்னை: புதிய அறிவிப்புகளை மட்டுமே தற்போதைய ஜெயலலிதா ஆட்சியில் பார்க்க முடிகிறது. ஆனால், அவற்றின் செயலாக்கம் எதுவும் இல்லை. தமிழகத்தில் நடப்ப்பது ‘வெத்து அனவுன்ஸ்மெண்ட் ஆட்சி தான் என விமர்சித்துள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
சமீபகாலமாக மின்பற்றாக்குறையால் தமிழக தொழில்துறைகள் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. மேலும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பிரதமராக்கும் நோக்கத்தில் பாடுபட்டு வருகிறார்கள் அவரது கட்சித் தொண்டர்கள்.
இந்நிலையில், தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி குறித்து தனது விமர்சனக்களை தெரிவித்துள்ளார் திமுக பொருளாளர் ஸ்டாலின்.
இது குறித்து தினமலர் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் திட்டம்...,
கேள்வி: ஜெயலலிதா பிரதமர் ஆனால்...?
பதில்: அ.தி.மு.க., ஆட்சி மீதான அதிருப்தி அலை தான் தமிழகத்தில் வீசிக் கொண்டு இருக்கிறது. ஒருவேளை, அவர்களின் கணக்கை, ஒரு வாதத்திற்காக எடுத்துக் கொண்டாலும், தேசிய அரசியலில், ஜெயலலிதா எப்படி செயல்படக் கூடியவர் என்பதற்கு, நிறைய முன்னுதாரணங்கள் உள்ளன.
நம்பகத்தன்மை அற்றவர்....
தன் சுயநலத்திற்காக, 13 மாதங்களில், வாஜ்பாய் அரசை கவிழ்த்தவர். ஜனாதிபதி தேர்தலில், கம்யூனிஸ்ட்களுடன் கூட்டணி வைத்தார்; ஆனால், பா.ஜ., வேட்பாளர் பைரோன்சிங் ஷெகாவாத்துக்கு, தன் கட்சி எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை ஓட்டு போட வைத்தார். மன்மோகன் சிங் அரசில், உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல் தன்னிடம் தொலைபேசியில் பேசியதை, ரகசிய காப்பு உறுதிமொழியை மீறி வெளிப்படுத்தினார். 'நம்பகத்தன்மையற்றவர் ஜெயலலிதா' என்பது தான், இந்தியாவில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் மதிப்பீடு.ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜெயலலிதாவை முன்னிறுத்தி, மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில், தீவிரமாக இருக்கின்றனர். அதுதான் வேடிக்கையாக இருக்கிறது.ஏனென்றால், ஒருவர் மீது, ஊழல் புகார் கிளம்பினாலும், அது தொடர்பாக எப்.ஐ.ஆர்., போட்டாலும் அவர் பதவி விலக வேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் தலைவர்கள் மட்டுமின்றி, பா.ஜ., - காங்கிரஸ் தரப்பில் இருந்தும் வலியுறுத்துகின்றனர்.
இது எப்படி சாத்தியம்...?
சுரங்க விவகாரத்தில், காங்கிரசின் நெருக்கடி யால், பா.ஜ., முதல்வர் எடியூரப்பா பதவி விலகினார். 'ஒருவர் மீது குற்றச்சாட்டு இருந்தாலே, அவர்கள் பதவிக்கு வரக்கூடாது' என, வலியுறுத்தும் கம்யூனிஸ்ட்கள், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கடந்த, 18 ஆண்டுகளாக விசாரணையில் உள்ள ஊழல் வழக்குகளை சந்தித்துக் கொண்டு இருக்கும் ஜெயலலிதாவை எப்படி ஆதரிக்கின்றனர்? காமன்வெல்த் விளையாட்டு ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் கல்மாடி வெற்றி பெற்றால், அவரை ஆதரிப்பார்களா? இவர்களையெல்லாம் விட அதிகக் குற்றச்சாட்டுக்குள்ளானவர் ஜெயலலிதா என்பது கம்யூனிஸ்ட் தலைவர்களுக்குத் தெரிந்ததே, அவர்கள் அதை மறைத்தாலும், கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மறக்க மாட்டர்.ஜெயலலிதா பிரதமரானால், ஊழல், இந்திய துணை கண்டத்தையே துளை போட்டு விடும்; இந்தியா இருண்ட கண்டமாகி விடும்.
இடம்பெயரும் தொழில்துறை...
கேள்வி: தமிழகத்தில் தொழில் துறை நிலைமை எப்படி? கர்நாடகா, குஜராத்துக்கு முதலீடுகள் செல்லாமல் தடுப்பது எப்படி?
பதில்: கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து, பிப்., 3ம் தேதி, சட்டசபையில் ஜெயலலிதா அளித்த பதிலில், 'மைனாரிட்டி தி.மு.க., ஆட்சியில், ஒப்பந்தங்கள் மூலமும், அரசாணைகள் மூலமும், 54 தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்வதாக சொல்லப்பட்ட தொகை, 66,664 கோடி ரூபாய்' என, கூறியுள்ளார். 'இதில், 12 தொழில்கள் துவங்கவில்லை' என, அவர் கூறினாலும், தன் பதில் மூலமாக, 42 தொழில்கள், தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்டன. 50,682 கோடி ரூபாய்க்கான தொழில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்பதை, ஒப்புக் கொண்டிருக்கிறார்.
சுட்டிக்காட்டிய கருணாநிதி...
இதைத் தான், கருணாநிதியும் சுட்டிக் காட்டி உள்ளார். ஆனால், 'கடந்த, மூன்று ஆண்டு கால ஆட்சியில், 10,660 கோடி ரூபாய் முதலீடு தான், செய்யப்பட்டிருக்கிறது' என்பதை, ஜெயலலிதாவே தன் பதிலில் குறிப்பிட்டு உள்ளார்.தமிழகத்தை, தொழில் துறையில் பல வகையிலும் முன்னேற்றி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதில், கடந்த தி.மு.க., அரசு பெரும் முனைப்பு காட்டியது.அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியும், அமைச்சர்களும், அதிகாரிகளும், தொழில் முதலீடுகளையும், தொழிலகங்களையும் அதிகரிப்பதில், நேரடியாக அக்கறை செலுத்தினர்.
மீண்டும் வரும்....
இன்றைய ஆட்சியில், ஆர்வமாக வரும், தொழில் முதலீட்டாளர்கள் கூட, சரியான வழிகாட்டுதலும், ஒத்துழைப்பும் இல்லாத தால், கர்நாடகா, குஜராத் உட்பட, வேறு மாநிலங்களுக்கு சென்று விடுகின்றனர். மத்திய அரசு வழங்கும், தொழில் முதலீட்டு வாய்ப்புகளையும் ஜெ., அரசு பயன்படுத்திக் கொள்வதில்லை. இரண்டு ஆண்டு பொறுத்திருங்கள்; தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். தற்போது வெளி மாநிலங்களுக்கு செல்லும் தொழில் முதலீடுகள், பழையபடி தமிழகத்தை நோக்கி வரும்.
குற்றச்சாட்டு....
கேள்வி: சென்னையை போல, தென் மாவட்டங்களில், தொழில் துறையை வளர்க்க, தி.மு.க., - அ.தி.மு.க., போதிய முயற்சிகள் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?
பதில்: தி.மு.க., ஆட்சியில், தென் தமிழகத்தின் வளர்ச்சிக்காக, நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில், வல்லுனர் குழு அமைக்கப்பட்டு, பரிந்துரைகள் பெறப்பட்டன. தூத்துக்குடி பகுதியில், 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில், டாடா ஸ்டீல் தொழிற்சாலை, மதுரை, திருநெல்வேலியில் கணினி மென்பொருள் பூங்காக்கள் உருவாக்கப்பட்டன.அவற்றின் மூலம், பல இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். தென் தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி யில், பல மின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. நான்கு வழிச் சாலைகள் மூலம், வலுவான தொழில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி துறைமுகம் மேம்படுத்தப்பட்டு உள்ளது. மாறனின் கனவுத் திட்டமான, நாங்குநேரி தொழில் பூங்கா என்பது, தி.மு.க., எடுத்துள்ள பெரும் முயற்சி; அதை நிறைவேற்ற தொடர்ந்து செயல்படுவோம்.
தென் தமிழக மக்களுக்காக....
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம், தென் தமிழக கடற்கரை பகுதிகளில் வாழும் மக்களின், வாழ்வாதாரம் மேம்படும். அதற்கான முழு முயற்சிகளையும், தி.மு.க., எடுத்த நிலையில், அ.திமு.க., அரசு, தென் தமிழக மக்களின் நலனை புறக்கணித்து, அந்த திட்டத்தை முடக்கும் வகையில், வழக்கு தொடர்ந்துள்ளது.தி.மு.க., எடுத்த முன்முயற்சிகளால், மகேந்திரகிரியில் திரவ எரிபொருள் ஆய்வுக்கான தனி மையம், தற்போது செயல்பட துவங்கி உள்ளது. அதுபோல், குலசேகரன்பட்டினத்தில், ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளை, தி.மு.க., மேற்கொண்டுள்ளது. இவையனைத்தும், தென் தமிழக மக்களின் நலனுக்கும் வளர்ச்சிக்குமானவை.
விவசாயிகள் தற்கொலை....
கேள்வி:தமிழக விவசாயிகள் நிலைமை எப்படி இருக்கிறது?
பதில்:தி.மு.க., ஆட்சியில், பட்டினிச்சாவோ, விவசாயிகள் தற்கொலையோ நடக்காத மாநிலமாக, தமிழகம் இருந்தது. ஜெயலலிதா ஆட்சியில், காவிரி டெல்டா பகுதியில், 15க்கும் மேற்பட்ட விவசாயிகள், தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.காவிரி நீருக்காக, தனக்குத்தானே பாராட்டு விழா நடத்தி, 'பொன்னியின் செல்வி' என, பட்டம் சூட்டிக் கொண்டவர் ஜெயலலிதா. அவருக்கு பட்டம் கிடைத்தது. ஆனால், விவசாயிகளுக்கு உரிய பருவத்தில் தண்ணீர் கிடைத்ததா?தி.மு.க., ஆட்சியில் தூர்வாரும் பணிகள் முறையாக நடந்தன. இந்த ஆட்சியில், ஆறுகள், வாய்க்கால்களை ஒழுங்காக தூர் வாரவில்லை. அதனால், மேட்டூர் அணையை திறந்தும் பயனில்லாமல், தண்ணீர் எல்லாம் கொள்ளிடம் வழியாக, கடலில் போய் கலந்து வீணாகி விட்டது.
கொடநாடு தான் முக்கியம்...
இந்தாண்டு, குறுவை சாகுபடி நடக்கவில்லை; சம்பா சாகுபடியும் சரியாக நடக்கவில்லை. 'வறட்சி நிவாரணம்' என, ஜெயலலிதா அரசு அறிவித்தது. அதை முறையாக வழங்கினார்களா?வறட்சி நிவாரண முறைகேடுகளை எதிர்த்து, அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே, போராட்டம் நடத்தியது; விவசாய அமைப்புகள் அனைத்தும் போர்க்கொடி தூக்கின. நெல் விவசாயிகள் மட்டுமல்ல; கரும்பு விவசாயிகளும், கொள்முதல் விலையாக, ஒரு டன்னுக்கு, 3,500 ரூபாயாக தர வேண்டும் என, போராடுகின்றனர். தென்னை விவசாயிகள், தங்களுக்கான விலையை கேட்கின்றனர். ஏழை விவசாயிகளின் வேதனைக் குமுறலை, காதிலேயே போட்டுக் கொள்ளாமல் அலட்சியமாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார், கோடநாடு எஸ்டேட்டை பராமரிக்கும் ஜெயலலிதா.
நிர்வாக சீர்கேடு...
'ஜெயலலிதா ஆட்சியில், நிர்வாக சீர்கேடுஏற்பட்டுள்ளது' என்ற குற்றச்சாட்டை, தி.மு.க முன் வைக்கிறது. ஆனால், இதனால் மக்களுக்கு பாதிப்பில்லை என்ற கருத்து நிலவுகிறதே... இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: 'விலைவாசியைக் குறைப்போம்' என, வாக்குறுதி கொடுத்து, தேர்தலில் ஜெயித்தவர்களின் ஆட்சியில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, விலைவாசி உயர்ந்து கிடக்கிறதே; இது மக்களை பாதிக்கவில்லையா. சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து, நாள்தோறும், கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் கொடுமைகள் நடக்கிறதே; இது மக்களை பாதிக்கவில்லையா. தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட, இரண்டு மணி நேர மின்வெட்டிற்கே, வானத்திற்கும், பூமிக்குமாக எம்பிக் குதித்த ஜெயலலிதாவின் ஆட்சியில், தமிழகமே இருளில் மூழ்கி, அனைத்துத் தொழில்களும், நடைமுறை வாழ்க்கையும் முடங்கிக் கிடக்கிறதே; இது மக்களுக்கு பாதிப்பிலையா.
மக்களைப் பாதிக்கவில்லையா....?
தொழில்களும், தொழிலாளர்களும் அண்டை மாநிலங்களை நோக்கி அணி வகுக்கவில்லையா. இல்லாத மின்சாரத்திற்கு, இரண்டு மடங்கு கட்டணத்தை உயர்த்தியிருக்கின்றனரே, இது பாதிப்பில்லையா. பேருந்து கட்டணம், பால் விலை என, அனைத்தும் உயர்ந்துள்ளதே; இவை மக்களை பாதிக்கவில்லையா. யாருமே தங்கள் தொழிலை செய்ய முடியாத அளவிற்கு, தமிழகத்தில் மிகக் கடுமையான லஞ்ச லாவண்யத்தால், தேக்க நிலை ஏற்பட்டுள்ளதே; இது பாதிப்பில்லையா. அ.தி.மு.க., ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகளால், மக்கள் எந்தளவு பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது, லோக்சபா தேர்தலில் வெளிப்படும்.
2ஜி விவகாரம்....
கேள்வி: '2ஜி' விவகாரத்தில், தி.மு.க.,வை காங்., மிரட்டுகிறதா?
பதில்: 2ஜி' விவகாரத்தில், தி.மு.க.,வின் கருத்து களை, மத்திய காங்., அரசு அலட்சியப்படுத்தியிருக்கிறது. 'பார்லிமென்ட் கூட்டுக்குழுவில், ஆ.ராஜா நேரடியாக பதிலளிக்க வேண்டும்' என, அதில் இடம் பெற்றுஇருந்த, பா.ஜ., இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியும் கூட, அந்த வாய்ப்பு வழங்கவில்லை. அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குமூலத்தையும், கூட்டுக்குழு சமர்ப்பித்த அறிக்கையில் இணைக்கவில்லை. இதுகுறித்து, பார்லிமென்டில், தி.மு.க.,வும் மற்ற கட்சிகளும் குரலெழுப்பியும், மத்திய அரசுக்குத் தலைமை வகிக்கும் காங்., அதற்கு செவி சாய்க்கவில்லை. இதுபோல், '2ஜி' தொடர்பான பல நடவடிக்கைகளிலும், ஒருதலைபட்சமான செயல்பாடுகளே தொடர்கின்றன. இதைத் தான், பொதுக்குழுவில், கருணாநிதி விரிவாகவே பேசினார்.காங்., எப்படி நடந்துக் கொண்டது என்பதை குறிப்பிட்டார். தி.மு.க.,வை யாராலும் மிரட்ட முடியாது. எமர்ஜென்சி உள்ளிட்ட நெருக்கடிகளை சந்தித்து நிமிர்ந்த நிற்கும் இயக்கம் தான், தி.மு.க.,
ஒழுங்காக செயல்படுகிறதா மெஜாரிட்டி...?
கேள்வி: 'கடந்த தி.மு.க., ஆட்சியை, மைனாரிட்டி அரசு' என, ஜெயலலிதா குற்றம் சாட்டி வந்தார். அதாவது,'ஒழுங்காக செயல்படவில்லை' என்றார். இப்போது, மெஜாரிட்டியாக உள்ள அ.தி.மு.க., ஆட்சி ஒழுங்காக செயல்படுகிறதா?
பதில்: தி.மு.க., அரசு, மைனாரிட்டி சமுதாய மக்களின் அரணாக இருந்து, அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை முறையாக வழங்கியது. தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாவலனாக இருந்து, அருந்ததிய சமுதாயத்திற்கு, உள் ஒதுக்கீட்டை வழங்கியது.பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வணிகர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், திருநங்கையர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட, அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காகப் பாடுபட்டது.மக்களை ஏமாற்றி, மெஜாரிட்டி பலத்துடன் வெற்றி பெற்ற ஜெயலலிதா அரசில், தமிழக மக்களில், எந்த பிரிவினர் நன்மை பெற்றுள்ளனர் என, சொல்ல முடியுமா.
வெறும் அனவுன்ஸ்மெண்ட் அரசு....
மூன்றாண்டுகளாக கவர்னர் உரையிலும், பட்ஜெட்டிலும் அறிவிப்புகள் மட்டுமே, வெளியிடுகின்றனர். முக்கியமான அறிவிப்புகளைக் கூட, ஜெயலலிதாவைத் தவிர, யாரும் செய்யக் கூடாது என, 110வது விதியின் கீழ், 110க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.ஏதாவது உருப்படியான திட்டம் நடந்து இருக்கிறதா. மோனோ ரயில் அறிவித்து, மூன்று ஆண்டு ஆகிறது. மோனோ ரயில் வருகிறதோ, இல்லையோ... ஆண்டுதோறும்,' வரப்போகிறது' என்ற அறிவிப்பு மட்டும் வருகிறது.எல்லாமே, 'வெத்து அனவுன்ஸ்மென்ட்' தான். நடப்பது, 'ஜெயலலிதாவின் வெறும் அனவுன்ஸ்மென்ட் ஆட்சி' என இவ்வாறு தனது பேட்டியில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.