நான் என்ன அவங்க மாதிரி ஊழல் வழக்கில் திகார் சென்றேனா?: அன்புமணி ராமதாஸ்
சென்னை: நமக்கு நாமே பயணத்தின் மூலம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடிப்பதாக பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் நமக்கு நாமே விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.
இந்நிலையில் இது குறித்து பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில்,
ஸ்டாலின்
ஸ்டாலினின் நமக்கு நாமே பயணப் பிரச்சாரம் எல்லாம் வெறும் நடிப்பு ஆகும். அவர் உடையை மாற்றினால் மட்டும் தமிழகத்தில் மாற்றம் வந்துவிடாது. தமிழக மக்கள் திமுக மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். திமுக சொல்வதை மக்கள் ஏற்க மாட்டார்கள். திமுக எங்களை அப்படியே காப்பியடிக்கிறது. தமிழகத்தில் மீண்டும் மதுவை கொண்டு வந்ததே திமுக தான்.
பாமக
26 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட பாமக அதிமு, திமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றுக் கட்சியாக இன்று வளர்ந்துள்ளது. மக்கள் எங்களை ஏற்றுக் கொண்டதற்கு 50 ஆண்டுகளாக நடந்து வரும் திராவிட ஆட்சி மீது அவர்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பே காரணம்.
கூட்டணி
திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது இல்லை என்று கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே பாமக பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் என்னை கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவித்தார்கள். அதில் இருந்து நான் மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்தித்து பேசி வருகிறேன்.
தேர்தல்
நாங்கள் யாரையும் நம்பி சட்டசபை தேர்தலை சந்திக்கப் போவது இல்லை. எங்களின் பலம், கொள்கை, இளைஞர்களை நம்பியுள்ளோம். அதிமுக, திமுக தவிர வேறு எந்த கட்சியினரும் எங்களுடன் கூட்டணி வைக்கலாம். அதிமுக அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளார். எங்கு பார்த்தாலும் ஊழல். நிர்வாகமும் சரி இல்லை. பணத்தை நம்பி தான் அதிமுக உள்ளது.
திமுக
கடந்த சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்துஸ்து கூட கிடைக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியவில்லை. 7 தொகுதிகளில் 3வது இடத்தை தான் பிடித்தது. இநத் தோல்விக்கு எல்லாம் காரணம் 2ஜி ஊழல், குடும்பப் பிரச்சனை.
முதல் கையெழுத்து
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு பற்றிய ஆவணத்தில் தான் முதல் கையெழுத்திடுவேன் என்று நான் கூறியதை ஸ்டாலின் காப்பியடித்து கூறுகிறார். இனிமேல் மாற்றம், முன்னேற்றம் அன்புமணி என்பார்கள். ஸ்டாலினின் நடிப்பு இனியும் எடுபடாது.
மாற்றம்
நடிகர் சங்க தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அங்கு இளைஞர்கள் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதே போன்று சட்டசபை தேர்தலில் மாற்றம் ஏற்படும்.
மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் அங்கம் வகித்தாலும் மாநிலத்தில் அப்படி இல்லை.
ஊழல்
ஸ்டாலின் என் மீது ஊழல் புகார் கூற முடியாது. என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. நான் ஒன்றும் ஊழல் வழக்கில் 6 மாதமோ, 1 ஆண்டோ திகாருக்கு சென்று வரவில்லை. திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி, மகள் மீது ஊழல் வழக்கு உள்ளது.
வழக்கு
நான் லஞ்சம் வாங்கினேன் என்று கூறப்படவில்லை. எப்.ஐ.ஆரிலும் என் பெயர் இல்லை. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள் என் பெயரை சேர்த்துள்ளனர். இது குறித்து நான் வழக்கு தொடர்ந்திருக்கிறேன். மருத்துவ கல்லூரிகளுக்கு அதிகாரிகளின் ஒப்புதலோடு தான் அங்கீகாரம் வழங்கப்பட்டது என்றும் இதில் என் மீது தவறு இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2ஜி
2ஜி வழக்கில் மூட்டை மூட்டையாக பணத்தை பரிமாறியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரே மேடையில் விவாதிக்க வாருங்கள் என்று ஸ்டாலினுக்கு நான் 4 முறை கடிதம் எழுதியும் அவர் தயங்குகிறார். வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவதாக இருந்தால் விவாதத்திற்கு வர வேண்டியது தானே. ஸ்டாலினை கட்சியில் திணிக்கவே இந்த நமக்கு நாமே பயணம்.
ஏன்?
மீனவர்கள், நெசவாளர்கள், விவசாயிகளை ஸ்டாலின் சந்தித்து அதை செய்வேன், இதை செய்வேன் என்கிறாரே இதை எல்லாம் முந்தைய திமுக ஆட்சியில் ஏன் செய்யவில்லையாம். அவர் குடிசைகளுக்கு செல்கிறார். தமிழகத்தில் குடிசைகள் இன்னும் இருப்பதற்கு அவரது தந்தையே காரணம். இந்நிலையில் மாற்றம் பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதை இல்லை.