எழுந்து வா.. துவண்டு நிற்காதே.. கருணாநிதி ஸ்டைலை கையில் எடுத்த ஸ்டாலின், கனிமொழி
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் வழித்தோன்றல்களான மு.க.ஸ்டாலினும், கனிமொழியும் தந்தையின் வழியொற்றி தங்களது அரசியல் பணிகளில் சுறுசுறுப்பாகி விட்டனர்.
எல்லோருக்கும் கருணாநிதி எப்படி தலைவரோ, அதேபோலத்தான் ஸ்டாலின், கனிமொழிக்கும். தந்தை என்று சொன்னதை விட தலைவர் என்று சொன்னதுதான் அதிகம். அந்த அளவுக்கு தலைவராகவே கடைசி வரை வாழ்ந்து மறைந்தவர் கருணாநிதி.
குடும்பத்தை விட, உறவுகளை விட கட்சிப் பணியும், சமூகப் பணியும், அரசியல் பணியும்தான் முதலில் என்பதை கருணாநிதி இவர்களுக்கு எந்த அளவுக்கு புகட்டியிருக்கிறார் என்பது இவர்களது செயல்பாடுகளிலிருந்தே புரிந்து கொள்ள முடியும். கருணாநிதி மறைந்தபோது எல்லோரையும் போல இடிந்து போயினர் இவர்களும். ஆனால் நல்லடக்கம் முடிந்த மறு நாளே இவர்கள் தத்தமது வழக்கமான பணிகளில் இறங்கி விட்டனர்.
பணிகளில் இறங்கிய ஸ்டாலின்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தார். அத்தோடு நில்லாமல் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்து கட்சியின் செயல் தலைவராக அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளைப் பார்வையிட்டு உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
ஸ்டெர்லைட்டைக் கையில் எடுத்த கனிமொழி
மறுபக்கம் கனிமொழி ஸ்டெர்லைட் விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு கோட்டை விட்டதை சுட்டிக் காட்டி சுளுக்கெடுத்துள்ளார் தனது டிவிட்டர் கருத்து மூலம்.
மெரினாவில் காட்டிய அக்கறையை ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஏன் காட்டலை.. கனிமொழி கடும் தாக்கு
டிவிட்டரில் கொட்டு
ஸ்டெர்லைட் போன்ற மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் மெரினா கடற்கரை விவகாரத்தில் தமிழக அரசு கவனம் செலுத்தியதை சுட்டிக் காட்டி சுள்ளென்று வைத்துள்ளார்.
இதுதான் கருணாநிதி ஸ்டைல்
இதுதான் கருணாநிதி ஸ்டைல். பெரிய தோல்வியை சந்திப்பார். வரலாறு காணாத தோல்வியை திமுக சந்தித்திருக்கும். சறுக்கலை பார்த்திருக்கும். ஆனால் மறு நாளே தனது வழக்கமான பணிகளில் மூழ்கி விடுவார். செயற்குழு கூட்டம், பொதுக்குழுக் கூட்டம், உயர்நிலை செயல் திட்டக் கூட்டம் என அடுத்தடுத்து கூட்டங்களைக் கூட்டுவா். திட்டங்களைத் தீட்டுவார்.. போய்க்கொண்டே இருப்பார்.
இதுதான் வெற்றி ரகசியம்
அத்தோடு நிற்பாரா.. முரசொலியில் உடன்பிறப்பே எழுந்து வா.. விழுந்து கிடக்காதே.. துவண்டு நிற்காதே.. துடிப்புடன் கிளம்பு.. தோள் தட்டி வா என்று தட்டிக் கொடுத்து தைரியமூட்டி அடுத்தடுத்து காத்துக் கிடக்கும் பணிகளை ஞாபகமூட்டுவார். இதுதான் கருணாநிதியின் மகத்தான சாதனைகளின் ரகசியம்
வேலையைப் பார்
புயலே அடித்துப் போட்டாலும் ஊதி விட்டு தனது பணிகளில் கவனம் செலுத்துவதுதான் கருணாநிதி. தோல்வி கண்டு துவளாதே, தொடர்ந்து நடை போடு.. வெற்றிகள் உன் வசமாகும்.. சாதனைகள் உன்னைத் தேடி வரும். இதுதான் கருணாநிதியின் வெற்றி சூத்திரம். அந்த பாணியைத்தான் தற்போது ஸ்டாலினும், கனிமொழியும் கையில் எடுத்திருப்பதாக தெரிகிறது.