தேமுதிக எப்போது திமுக கூட்டணியில் சேரும்?... ஸ்டாலின் பதில்
திருச்சி: தேமுதிக எப்போது திமுக கூட்டணியில் வந்து சேரும் என்பது குறித்து திமுக பொருளாளர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் திமுக பொருளாளர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்களாவது:-
திருச்சியில் மணிமண்டபம்...
கேள்வி:- திருச்சியில் மொழிப்போர் தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். நான்கரை ஆண்டுகள் முடிந்தும் இதுவரை கட்டப்படவில்லையே?
பதில்:- அவர் அறிவித்த எதைத்தான் செய்து இருக்கிறார்? மதுரையில் தமிழ் தாய்க்கு சிலை அமைக்கப்படும் என்றார். இதுவரை அமைக்கப்படவில்லை.
|
செம்மொழி பூங்கா சின்னாபின்னம்..
செம்மொழி பூங்காவை சின்னா பின்னப்படுத்தினார்கள். தொல்காப்பிய பூங்காவை செயல்படுத்தவில்லை. இப்படி தமிழ் மொழிக்கு எதிராக செயல்படும் அ.தி.மு.க. அரசுக்கு மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த அருகதை கிடையாது.
கருத்துக்கணிப்புகள்...
கேள்வி:- சமீபத்தில் வெளி வந்து உள்ள கருத்துக்கணிப்புகள் தி.மு.க.வுக்கு சாதகமாக உள்ளதே? இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- பொதுவாக கருத்து கணிப்புகள் தி.மு.க.வுக்கு சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் நாங்கள் அதனை பொருட்படுத்துவது இல்லை. மக்கள் கருத்துக்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம். மக்கள் தி.மு.க.வுக்கு ஆதரவாக உள்ளனர்.
தேமுதிக...
கேள்வி:- திமுக கூட்டணியில் தேமுதிக எப்போது சேரும்?
பதில்:- வந்தால் கண்டிப்பாக உங்களிடம் (செய்தியாளர்களிடம்) தெரிவிப்பேன்' என அவர் பதிலளித்தார்.
தொல்லை, துன்பம்...
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடந்த தொழிலதிபர் வீ.கே.யென். கண்ணப்பன் மகன் நாராயணன் - அனுசுயா திருமணத்தை நடத்தி வைத்த ஸ்டாலின், ‘தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியில் விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் அதிபர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மகளிர், இளைஞர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த தொல்லை, துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.
மாற்றம் தேவை...
அவர்கள் அந்த தொல்லைகளில் இருந்து விடுபட ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அந்த மாற்றத்தை உருவாக்குவதற்காக தான் நமக்கு நாமே சுற்றுப்பயணத்தை தொடங்கினேன்.
பிப்ரவரி 12ம் தேதியோடு...
மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் 16 தொகுதிகள் தவிர மற்ற எல்லா தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்துவிட்டேன். வருகிற பிப்ரவரி 12-ந்தேதிக்குள் அந்த 16 தொகுதிகளிலும் சுற்றுப்பயணத்தை முடித்து விடுவேன்" என்றார்.
சம்பூர்ணத்தம்மாள்...
அதனைத் தொடர்ந்து திருச்சி திருவானைக்காவல் சென்ற ஸ்டாலின், அங்கு திமுக முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்த பொற்செல்வி இளமுருகுவின் சகோதரி மறைந்த சம்பூர்ணத்தம்மாள் உருவப்படத்தை திறந்து வைத்தார்.
ஊர்வலம்...
மாலையில், இந்தி திணிப்பிற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது தமிழ் மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வீர வணக்க நாள் மவுன ஊர்வலம் ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது.
அஞ்சலி...
சாஸ்திரி சாலை, தென்னூர் அண்ணா நகர் வழியாக சென்ற ஊர்வலம், உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் உள்ள தியாகி சின்னசாமி நினைவிடத்தை அடைந்தது. அங்கு ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் மொழிப்போர் தியாகி விராலிமலை சண்முகம் நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மவுன அஞ்சலி...
அதன் பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து கூட்டத்தினர் கலைந்து சென்றனர். பின்னர் மணப்பாறையில் நடந்த வீர வணக்கநாள் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.