ஏர்போர்ட்டில் பேட்டி கொடுப்பதற்காகவே ஒரு மத்திய அமைச்சர்: ஸ்டாலின் கிண்டல்
சென்னை: விமான நிலையங்களில் பேட்டி கொடுப்பதற்கு என்றே ஒரு மத்திய அமைச்சரை நியமித்துள்ளனர். அந்த விஷயத்தில் பொன். ராதாகிருஷ்ணன் புகழ் பெற்றவர் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது பற்றி திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பணப் பட்டுவாடா குறித்து முதல்வர் அளித்த பதில் திருப்தியாக இல்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கையில் உள்ளது.

முதல்வர்
வழக்கின் முதல் குற்றவாளியே முதல்வர் தான். மேலும் 9 அமைச்சர்களுக்கும் இதில் தொடர்பு உள்ளது. பல அமைச்சர்கள் மீது வழக்கு தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு
ஏற்கனவே அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தபோது அவர்களை வேலை செய்யவிடாமல் தடுத்ததற்காக அமைச்சர்கள் ராதாகிருஷ்ணன், தளவாய் சுந்தரம் உள்ளிட்ட அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு உள்ளது.

பதவி
தற்போது முதல்வர் உள்பட 9 அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை நியாயமாக நடக்க வேண்டும் எனில் முதல்வர் உள்ளிட்ட 9 அமைச்சர்களும் பதவியில் இருக்கக் கூடாது என்றார்.

பொன். ராதாகிருஷ்ணன்
திமுக காணாமல் போய்விடும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் கூறுகையில், யார் காணாமல் போவது என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். விமான நிலையங்களில் பேட்டி கொடுப்பதற்கு என்றே ஒரு மத்திய அமைச்சரை நியமித்துள்ளனர். அந்த விஷயத்தில் பொன். ராதாகிருஷ்ணன் புகழ் பெற்றவர் என்றார்.












Click it and Unblock the Notifications