ஓஎன்ஜிசி போராட்டம்: திருச்சி மத்திய சிறையில் பேராசிரியர் ஜெயராமனை சந்தித்த ஸ்டாலின்
ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக போராடியதற்காக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஜெயராமனை எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
திருச்சி: கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஜெயராமனை திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார்.
ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு எதிராக தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் நடைபெற்ற போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தியதற்காக, பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பாக பேராசிரியர் ஜெயராமனின் தந்தை தங்கவேலு உயிரிழந்தார். இதையடுத்து, தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க மூன்று நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தது.
அவருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் முடிவடைந்தையடுத்து, ஜெயராமன் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே இன்று கதிராமங்கலத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின், அங்கு போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
போராட்டக்காரர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், கதிராமங்கலத்தில் ஆய்விற்காக மட்டுமே ஓஎன்ஜிசிக்கு திமுக ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார். ஆனால் ஓஎன்ஜிசிக்கு அதிமுக ஆட்சியில் தான் குத்தகை ஒப்பந்தம் தரப்பட்டது என்றார்.
ஓஎன்ஜிசியிடம் குத்தகை ஒப்பந்தம் செய்ததற்கு முன்னால் மக்களின் கருத்தை அரசு கேட்டிருக்க வேண்டும் என்றார்.
மக்களை பற்றி சிறிது கூட சிந்திக்காத நிலையில் இன்றைய தமிழக அரசு இருக்கிறது. அதிமுக அரசின் நாள் எண்ணப்பட்டு வருவதாக ஸ்டாலின் கூறினார்
இதனையடுத்து திருச்சி மத்திய சிறைக்கு சென்ற மு.க.ஸ்டாலின், அங்கு சிறைவைக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஜெயராமனை சந்தித்து பேசினார். அப்போது கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டத்திற்கு திமுக துணை நிற்கும் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications