எங்கும் எதிலும் நமக்கு நாமேதான்... ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் திமுகதான்: ஸ்டாலின்
சென்னை: அ.தி.மு.க. பொதுக்குழுவிலும், கல்யாண வீட்டிலும் நமக்கு நாமே பற்றிதான் முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று ஆளும் கட்சியாகவும், எதிர்கட்சியாகவும் செயல்படுவது தி.மு.க. தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நமக்கு நாமே பயணம் மேற்கொண்டுள்ள மு.க. ஸ்டாலின் இன்று பெரம்பூர் ஜமாலியாவில் அருந்ததி மக்கள் நலச் சங்க பிரதிநிதிகளுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடி குறைகளைக் கேட்டறிந்தார். இதில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மணிவண்ணன், ஆதி தமிழர் பேரவை நாகராஜன், விக்டர், சாய் கிருஷ்ணன், செந்தமிழ் பிரியன், பார்த்தசாரதி, ஜெயக்குமார் உள்பட பலர் பேசினார்கள்.
அருந்ததியர்களுக்கு இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும். படிப்பு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும். நல வாரியம் வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

மக்கள் சந்திப்பு
இதற்கு பதிலளித்து பேசிய மு.க.ஸ்டாலின், நான் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களை சந்தித்து வருகிறேன்.
இப்போது நமக்கு நாமே பயணம் மூலம் தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்தித்த நான் தேர்தலுக்கு பிறகும் நமக்கு நாமே பயணத்தை நடத்த உள்ளேன்.
நமக்கு நாமே பயணத்தை ஆரம்பத்தில் கிண்டல் கேலி செய்தனர். கலர் கலராக சட்டை அணிகிறேன், டீ குடிக்கிறேன், ஆட்டோவில் போகிறேன் என்றனர்.

ஆளும் கட்சி, எதிர்கட்சி
நான் விமர்சனங்களை பற்றி கவலைப்படுவதில்லை. அ.தி.மு.க. பொதுக்குழுவில் கூட முதல்வர் ஜெயலலிதா நமக்கு நாமே பயணத்தை பற்றி தான் அதிகம் பேசி உள்ளார். ஒரு திருமணத்தில் நேற்று அவர் என்ன பேசினார் என்பதை பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள். கல்யாண வீட்டிலும் நமக்கு நாமே பற்றிதான் பேசுகிறார்கள். அங்கும் கதை விடுகிறார். கதை சொல்கிறார். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இன்று ஆளும் கட்சியாகவும், எதிர்கட்சியாகவும் செயல்படுவது தி.மு.க. தான்.

நமக்கு நாமே பயணம்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஸ்டாலின் அளித்த பதில்கள்
ஸ்டாலின் : நமக்கு நாமே பயணம் 99 சதவீதம் முடிந்துள்ளதே. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: 99 சதவீதம் அல்ல. 99.75 சதவீதம் முடிந்து விட்டேன். முதல்வர் ஜெயலலிதா நமக்கு நாமே பற்றி பேசியுள்ளதால் இந்த பயணத்தை வெற்றியாகவே கருதுகிறேன்.

ஜெயலலிதா குட்டிக்கதை
கேள்வி: உங்களுக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் உள்ள அரசியல் பற்றி முதல்வர் ஜெயலலிதா ஒரு திருமண விழாவில் பேசி இருக்கிறாரே?
ஸ்டாலின்: அவர் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாகத் தானே பேசி இருக்கிறார். ஆனால் நாங்கள் தெளிவாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோர் பங்கு போட்டுக் கொண்ட விவகாரத்தை பேசி இருக்கிறோம். அதே போல் தெம்பாக, துணிச்சலாக, மறைமுகமாக பேசாமல் முதல்வர் என்பதை உணர்ந்து தெளிவாக சொல்லட்டும். அதன் பிறகு நான் பதில் சொல்கிறேன்.

பாஜக - திமுக கூட்டணி
கேள்வி : பாஜக தி.மு.க. கூட்டணி ஏற்பட வாய்ப்பு உருவாகலாம் என தமிழிசை சவுந்தரராஜன் கூறி இருக்கிறாரே?
ஸ்டாலின் : அவர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்லவில்லை. பாஜக-தி.மு.க. கூட்டணி வரும் என நான் ஏதும் சொன்னேனா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சந்திப்பு
கேள்வி: வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவி சங்கர் உங்களை சந்தித்து இருக்கிறாரே?
ஸ்டாலின் : அவர் கூட்டணிக்காக வரவில்லை. நான் பெங்களூர் சென்றிருந்த போது அவரை ஏற்கனவே சந்தித்து இருக்கிறேன். சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்ட போது இந்த அரசு சரியாக செயல்படவில்லை என்று போனில் தெரிவித்த போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய எங்களுக்கு வாழ்த்து சொல்லி இருந்தார். இப்போது சென்னைக்கு பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த அவர் என்னை சந்தித்தார். டெல்லியில் 12, 13 தேதிகளில் பெரிய நிகழ்ச்சி நடைபெறுவதாகவும், அதற்கு வருமாறும் அழைப்பு விடுத்தார்.

காங்கிரஸ் கூட்டணி
கேள்வி: காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி பேச்சு நடத்த குலாம் நபி ஆசாத் சென்னை வர இருப்பதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறி இருக்கிறாரே?
பதில்: அவர் வந்தால், சந்தித்தால், உங்களை அழைத்து சொல்வோம்.

கூட்டணிக்கு காத்திருப்பு
கேள்வி: கூட்டணிக்காக தி.மு.க. காத்திருக்கும் நிலை வந்துள்ளதே?
பதில்: உங்களது யூகமான கேள்விகளுக்கெல்லாம் பதில் கூற முடியாது.

போலி வாக்காளர்கள்
கேள்வி: போலி வாக்காளர்கள் தொடர்பாக தேர்தல் கமிஷனர்களிடம் எடுத்து கூறப்பட்டுள்ளதா?
பதில்: நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அவர்களும் போலி வாக்காளர்களை நீக்குவதாக தொடர்ந்து உறுதி மொழி தருகிறார்கள். நேற்று கூட தலைமை கழகத்தில் இருந்து அமைப்பு செயலாளர் செய்தி தொடர்பாளர் உள்ளிட்டோர் சென்று தேர்தல் கமிஷனர்களிடம் வலியுறுத்தி வந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications