128 நாட்கள்தான்... தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்... "நமக்கு நாமே' பயணத்தில் ஸ்டாலின் நம்பிக்கை
சென்னை: தமிழகத்தில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் திமுகதான் என அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சியைப் போல மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்கிறோம். மக்களும் அமைச்சர்களிடம் தருவதைப் போல கோரிக்கை மனுக்களை தருகின்றனர். அதேநேரத்தில் ஆளுங்கட்சியின் தவறுகளைக் கண்டித்து குரல் கொடுத்தும், போராடியும் வருகிறோம் என்று நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தின் போது தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்த போது தெரிவித்தார்.
நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தின் 4வது கட்ட பிரச்சாரத்தை கடந்த 6ம் தேதி சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அவர் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக நேற்று தனது கொளத்தூர் தொகுதியில் உள்ள பெரியார் நகர் திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் தெற்கு ரயில்வே மற்றும் இணைப்பு பெட்டி தொழிற்சாலை (ஐசிஎப்) தொழிலாளர்களுடன் ஸ்டாலின் கலந்துரையாடினார்.
எஸ்ஆர்எம்யூ, ஐசிஎப் எஸ்.சி., எஸ்.டி. தொழிற்சங்கம், ஐசிஎப் திமுக தொழிற்சங்கம் உள்பட 10-க்கும் அதிகமான தென்னக ரயில்வே, ஐசிஎப் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தனியார் மயம்
கலந்துரையாடலில் பேசிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள், ‘‘ஐசிஎப்பை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், ஐசிஎப் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், தெற்கு ரயில்வேயில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே பணியமர்த்த வேண்டும், ரயில்வே தேர்வுகளில் தமிழர்கள் அதிக அளவில் வெற்றி பெற 234 பேரவைத் தொகுதிகளிலும் பயிற்சி மையங்களை அமைக்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும், தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், 7வது ஊதியக் குழுவில் உள்ள குறைகளைக் களைய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மக்களிடம் சந்திப்பு
அவர்களுக்கு பதிலளித்து பேசிய ஸ்டாலின் தமிழக மக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்க வேண்டும் என்பதற்காக நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணத்தை கடந்த செப்டம்பர் 20-ம் தேதி நாகர்கோவிலில் தொடங்கினேன். இன்றுடன் 214 தொகுதிகளில் மாணவர்கள், இளைஞர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், விவசாயிகள், நெசவாளர்கள், கூலித் தொழிலாளர்கள், சிறு, குறுந்தொழில் அதிபர்கள், சிறு வணிகர்கள் என பல்வேறு தரப்பு மக்களை அவர்களின் இடத்துக்கே சென்று சந்தித்துள்ளேன்.
திமுக மீது நம்பிக்கை
இதுவரை 11 ஆயிரம் கி.மீ. பயணம் செய்துள்ளேன். 214 தொகுதிகளிலும் சுமார் 4 லட்சம் கோரிக்கை மனுக்களை மக்கள் என்னிடம் வழங்கியுள்ளனர். இது திமுக மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
ஆளுங்கட்சி, எதிர்கட்சி
ஆளும் அதிமுக சார்பில் முதல்வரோ, அமைச்சர்களோ மக்களை நேரில் சந்திப்பதில்லை. அந்த தைரியமும் அவர்களுக்கு இல்லை. தமிழகத்தில் திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லை. ஆனாலும், ஆளுங்கட்சியைப் போல மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்கிறோம். மக்களும் அமைச்சர்களிடம் தருவதைப் போல கோரிக்கை மனுக்களை தருகின்றனர்.
மாற்றம் நடக்கும்
அதேநேரத்தில் ஆளுங்கட்சியின் தவறுகளைக் கண்டித்து குரல் கொடுத்தும், போராடியும் வருகிறோம். தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் திமுகதான். தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். அதிமுக ஆட்சி முடிய இன்னும் 128 நாள்களே உள்ளன. மக்கள் விரும்பும் மாற்றத்தை திமுக ஏற்படுத்தும்.
திமுக குரல் கொடுக்கும்
மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது தெற்கு ரயில்வே வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். ரயில்வே பணிகளில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், வாரிசுகளுக்கு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக குரல் கொடுக்கும் என்றார்.
ஆட்டோ ஓட்டுநர்கள்
நேற்று மாலையில் எழும்பூர் தொகுதியில் ஆட்டோ ஓட்டுனர்களுடன் கலந்துரையாடினார். பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் நடந்த நிகழ்ச்சியில் பெண் ஓட்டுனர்கள் உள்பட 300 பேர் கலந்து கொண்டனர். ஆட்டோ தொழிலாளர் ஒவ்வொருவரையும் ஸ்டாலின் கைகுலுக்கி வரவேற்றார். அப்போது, ஏராளமானோர் கோரிக்கை மனுக்கள் அளித்தனர். செல்போன் மூலம் ஸ்டாலினுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
தெம்புடன் வந்திருக்கிறோம்
நாங்கள் செய்த நன்மைகளை எண்ணி பார்த்து தெம்புடன் இங்கே வந்து நிற்கிறோம். ஒரு மந்திரியோ, எம்எல்ஏவோ என்றால் போலீஸ் துணையோடுதான் வரமுடியும். எங்களை போல ஆட்டோ தொழிலாளர்களும் மக்கள் சேவகர்கள்தான். எல்லாவற்றையும் இழந்த உங்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் போதாது. நிவாரண பணத்தை வங்கியில் செலுத்த வேண்டும் என முதலில் கூறியது கருணாநிதிதான்.
நலவாரியம் அமைத்தோம்
ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு நாங்கள் நலவாரியம் அமைத்து பல நன்மைகள் செய்தோம். ஆனால் இந்த ஆட்சியில் அந்த வாரியங்கள் செயல்படவில்லை. இந்த அரசு தொழிலாளர் நல விரோத அரசாக, மக்கள் நம்பிக்கை இழந்த அரசாக விளங்குகிறது. முரசொலி அறக்கட்டளை மூலம் நாங்கள் சிறந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பரிசுகள் வழங்கி வருகிறோம். பொருட்களை ஆட்டோவில் தவற விட்டவர்களிடம் மீண்டும் சேர்ப்பவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.
ஆட்டோ கட்டணம்
1999 முதல் இதுவரை 291 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.10 ஆயிரமாக இருந்த பரிசு தொகை ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை ரூ.21 லட்சம் பரிசாக தரப்பட்டுள்ளது. அதிமுக சார்பிலோ, அரசு சார்பிலோ இதுபோல ஏதாவது திட்டம் உண்டா. இந்த ஆட்சியில் ஆட்டோ கட்டணம் முறையாக நிர்ணயிக்கப்படவில்லை. ஜி.பி.எஸ் பொருத்திய மீட்டர்கள் வழங்கப்படவில்லை. அதற்கு ரூ.80 கோடி ஒதுக்கியதாக கூறினார்கள். அது எங்கே போனது என்று கேட்டார்.
பிரச்சார பீரங்கிகள்
நீங்கள் போராட்டம் நடத்தினால் தடியடி நடத்துகிறார்கள். இது கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கும் தெரியும். ஆனால் அவர்கள் அதிமுகவை குறை கூறும் போது திமுகவையும் சேர்த்து குறை கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. ஆட்டோ ஓட்டுனர்கள் பிரசார பீரங்கிகளாக விளங்குகிறார்கள். அவர்கள் மூலம்தான் நாட்டு நடப்பை அறிந்துகொள்ள முடியும். எனவே நீங்கள் இந்த நிலைமைகளை மக்களிடம் விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.