கருவாடு மீன் ஆகாது... ஸ்டாலின் கனவு பலிக்காது - ஜெயக்குமார்
எட்டாத பழத்திற்கு கொட்டாவி விடுபவர் ஸ்டாலின். அவர் கனவு எப்போதும் பலிக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: எட்டாக் கனிக்கு கொட்டாவி விடுபவர் மு.க. ஸ்டாலின் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை சந்திக்க தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை எதிர்கொள்வோம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மீன்வளத்துறை மற்றும் நிதியமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு கூறியுள்ளார்.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் அதிமுக மூன்று அணியாக பிரிந்துள்ளதால் அசாதாரண சூழல் நிலவுவதாக கூறினார்.
இதனால் தமிழக மக்கள் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். மக்களின் பிரச்சினைகளுக்கும், மக்கள் அடைந்த பாதிப்புகளுக்கும் விரைவில் தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்கள், மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுமா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஸ்டாலின், தேவைப்பட்டால் கொண்டு வருவோம் என்றார்.
ஸ்டாலின் கருத்துக்கு பதில் கூறியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், மு.க.ஸ்டாலின் எப்போதுமே எட்டாக் கனிக்கு கொட்டாவி விடுபவர். கறந்த பால் மடி புகாது, கருவாடு எப்போதும் மீன் ஆகாது. ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று கூறினார்.
அதிமுக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை சந்திக்க தயார் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications