அனல் பிரச்சாரத்திற்கு நடுவே ஆதிபராசக்தியை வழிபட்ட மு.க. ஸ்டாலின்
சென்னை: சட்டசபை தேர்தல் பிரச்சாரம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் பங்காரு அடிகளாரிடம், நேற்று ஆசி பெற்று ஆதிபராசக்தி அம்மனை, 108 போற்றி அர்ச்சனை செய்து வழிபட்டார்.
சித்திரை பவுர்ணமி விழா மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், வியாழக்கிழமை கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வியாழன் இரவு பிரச்சாரம் செய்த ஸ்டாலின், மேல்மருவத்துார் சித்தர் பீட வளாகத்தில் உள்ள, விடுதியில் தங்கினார்.
நேற்று பிற்பகலில் ஸ்டாலின் தனியாக சித்தர்பீடம் வந்தார் அவரை, ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க தலைவர் அன்பழகன் வரவேற்றார். அதன்பின், ஸ்டாலின், பங்காரு அடிகளாரை சந்தித்து, ஆசி பெற்றார். பின், பங்காரு அடிகளாருடன், ஸ்டாலின் தனியாக அரை மணி நேரம் பேசினார்.
இதனைத் தொடர்ந்து ஸ்டாலின், ஆதிபராசக்தி அன்னைக்கு, 108 போற்றி அர்ச்சனை செய்து வழிபட்டார். அவருக்கு பிரசாதங்கள் வழங்கினர். சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் சித்தர் பீடத்தில் இருந்து, தேர்தல் பிரசாரத்திற்கு ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் போட்டியிடும், திமுக வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று மாலை, 4 மணிக்கு, மேல்மருவத்துார், சோத்துப்பாக்கம் பகுதியில் வாகனத்தில் வந்த படி, ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அவருடன், மதுராந்தகம், திமுக வேட்பாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி மற்றும் செய்யூர் வேட்பாளர் ஆர்.டி. அரசு ஆகியோர் சென்றனர்.

ஸ்டாலின் பிரச்சாரம்
பிரசாரத்தின் போது, பேசிய ஸ்டாலின், இப்போது நானும், நீங்களும், சுட்டெரிக்கும் வெயிலில் நின்று கொண்டிருக்கிறோம். புவி வெப்பமயமாதல் காரணமாக, வரலாறு காணாத வெயில் உள்ளது. எனவே, புவி வெப்ப மய மாதலைத் தடுக்க, இந்தியா மட்டுல்லாது உலக நாடுகளும் மரங்களை அதிக அளவில் நடச் சொல்லி விழிப்புணர்வு ஊட்டி வருகின்றன.

மரம் நடுவதில் ஊழல்
மரம் வளர்ப்பதிலும் ஊழல் செய்த அரசு தான் ஜெயலலிதாவின் அரசு. அவரின் பிறந்த நாளுக்காக, அரசுசெலவில் மரங்களை நடுவதாகச் சொல்லி, ஊழல் செய்த ஜெயலலிதா அதற்கான கணக்கை சொல்லுவாரா?

பதில் சொல்வார்களா?
அதற்கான விளம்பரங்களை பக்கம் பக்கமாக அளித்தனர். அதில், அரசுத் தலைமைச் செயலர் ஞானதேசிகன் பெயர் இடம் பெற்றிருந்தது. அதற்கான பதிலை இந்தத் தேர்தல் முடிந்தவுடன் ஞானதேசிகன் சொல்லியாக வேண்டும்.

வேட்பாளர்கள் மாற்றம்
அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட புவனேஸ்வரனுக்கு எதிரான, 'வாட்ஸ் ஆப்' செய்தியால் அவர் மாற்றப்பட்டு, அமைச்சர் சண்முக நாதன் வேட்பாளராக ஆக்கப்பட்டார். தற்போது சண்முகநானுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது' என, செய்தி வெளியாகியுள்ளது.அந்த லட்சணத்தில் தான், ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் உள்ளது.

எல்லாம் பொய்
பிரச்சாரத்தில் ஜெயலலிதா பேசுவதெல்லாம் பொய் என்று கூறிய, ஸ்டாலின் திடீரென, 'பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த ஜெயலலிதாவே' என, ராகம் போட்டு, பாட்டு பாடி கட்சியினரை அசத்தினார்.

வில்லி - ஹீரோ
செய்யூரில் மின் நிலையம் அமையப் பாடுபட்டது திமுக அரசு தான். தற்போது அதன் நிலை எப்படி உள்ளது என்பது உங்களுக்கே தெரியும்.தற்போது, திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை தான் சூப்பர் ஹீரோ. அதாவது, தமிழகத்தை ஜெயலலிதா என்ற வில்லியிடமிருந்து காக்க வந்த ஹீரோ என்று கூறினார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications