செய்தீங்களா.. செய்தீங்களா.. ஒரே மாதிரியே தொடர்ந்து பேசும் ஸ்டாலின்!
முசிறி: முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஒரே மாதிரியே அவரை விமர்சித்துப் பேசுகிறார்.
ஜெயலலிதா செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களா என்று கேட்க ஸ்டாலினோ, ஜெயலலிதாவிடம் செய்தீஙகளா, நீங்கள் செய்தீங்களா என்று கேளுங்கள் என்று ஒரே மாதிரியே மக்களிடம் சொல்லி வருகிறார்.
இந்தத் தேர்தலில் பிரச்சினைகளைச் சொல்லி வாக்கு கேட்பதை விட தலைவர்களின் பேச்சுக்களை வைத்து மடக்கி மடக்கி விமர்சனம் செய்வதே அதிகமாக காணப்படுகிறது.
அந்த வகையில் முதல்வர் ஜெயலலிதா ஒவ்வொரு கூட்டத்திலும் மக்களைப் பார்த்தும் கேள்வியையே பிரசார மேட்டராக மாற்றி பேசி வருகிறார் ஸ்டாலின்.
பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் சீமானூர் பிரபுவை ஆதரித்து முசிறி, கைகாட்டி கிராமத்தில் ஸ்டாலின் பேசியதாவது....

காரிலும், வேனிலும் வந்து
நாங்கள் காரிலும், வேனிலும் வந்து உங்களை சந்திக்கிறோம் முதல்வர் ஜெயலலிதா மூன்று வருடங்களாக தனி விமானம், ஹெலிகாப்டர் மூலம் தான் எந்த நிகழ்ச்சிக்கும் சென்று வருகிறார். மக்களை சந்திக்க பயப்படுகிறார். ஜெயலலிதா ஓய்வு எடுப்பதற்கு கொடநாடு செல்கிறார்.

நல்லா இருக்கீங்களா...
பொது மக்களாகிய நீங்கள் நலமுடன் இருக்கிறீர்களா? நலமுடன் இல்லை என்று நீங்கள் குரல் எழுப்புவதிலிருந்தே தெரிகிறது மின்சாரம் இல்லை, விலைவாசி உயர்வு அவசிய பொருட்களின் விலை விஷம் போல் ஏறியுள்ளது. குடிக்கும் தண்ணீர் பத்து ரூபாய்க்கு அரசால் விற்கப்படுகிறது. அதனால் நன்றாயில்லை.

குடிநீரை விற்கிறார் ஜெயலலிதா
சுத்திகரிக்கப்பட்ட குடி நீரை மக்களுக்கு வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா கூறிவிட்டு தற்போது குடிநீரை விற்பனை செய்து வருகிறார். தண்ணீருக்கு வாரியம் அமைக்கப்பட்டு அதன் மூலம் உருவாக்கப்பட்டது தான் ராமநாதபுரம், ஒகேனக்கல், காவிரி, கூட்டுகுடிநீர் திட்டங்களாகும்.

திமுக ஆட்சியில் செய்ததைப் பாரீர்...
திமுக ஆட்சி காலத்தில் முசிறி காவிரி ஆற்றின் குறுக்கே முசிறி- குளித்தலையை இணைக்கும் பாலம் கட்டப்பட்டது. முசிறியில் உழவர் சந்தை, புதிய பேருந்து நிலையம், முசிறி நகரின் பல்வேறு பகுதிகளிலும் தார்சாலை, சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. முசிறி அரசு மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்பட்டது.

பாலம் உள்பட பல திட்டங்கள்
காவிரியின் கரையோர பகுதிகளில் படித்துறை, கைகாட்டியில் கோபுர விளக்கு, தா.பேட்டை ரோட்டில் கலப்பு காலனி, அய்யாற்றின் குறுக்கே பாலங்கள் என பல திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியது.

செய்தீங்களா என்று கேளுங்கள்
நலத்திட்டங்கள் எதுவும் செய்யாமல் மின்வெட்டு நேரத்தை அதிகரித்துள்ள ஜெயலலிதாவிற்கு தக்க பாடம் புகட்டுங்கள். செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களா என்று கூட்டங்களில் கேட்கும் ஜெயலலிதாவிடம் செய்தீர்களா, நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேளுங்கள் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications