அனைத்துக்கட்சியினருடன் கர்நாடக முதல்வரை சந்திக்க வேண்டும்... ஸ்டாலின் வலியுறுத்தல்!
காவிரி நீரைப் பெறுவதற்காக கர்நாடக முதல்வரை சந்திக்க முதல்வர் பழனிசாமி முடிவு செய்துள்ளது காலம் தாழ்ந்த முடிவானாலும் வரவேற்கத்தக்கது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை : காவிரி நீரைப் பெறுவதற்காக கர்நாடக முதல்வரை சந்திக்க முதல்வர் பழனிசாமி முடிவு செய்துள்ளது காலம் தாழ்ந்த முடிவானாலும் வரவேற்கத்தக்கது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அனைத்துக்கட்சியினர் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளையும் முதல்வர் தம்முடன் அழைத்து செல்ல வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது தொகுதியான சென்னை கொளத்தூரில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : கொளத்தூர் தொகுதியில் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க முயற்சித்து வருகிறேன். கொளத்தூரில் வார்டு 63ல் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தேன், அடுத்து திருவிக நகர் எஸ்ஆர்பி கோவில் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட உள்ள சமூக நலக்கூடத்தை பார்வையிட்டிருக்கிறேன்.
2016ல் முதன்முறையாக இந்த தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட போது முதன்முதலில் நான் பழுதாகி இருக்கக் கூடிய சமுதாய நலக்கூடத்தைத் தான் பார்வையிட்டேன். காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட சமூக நலக்கூடம் பயன்படுத்த முடியாமல் இருந்தது, அந்த வட்டாரத்தில் இருக்கும் மக்கள் இதனை நவீன திருமண மண்டபமாக மாற்ற கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் ரூ. 3 கோடி நிதி ஒதுக்கி மாநகராட்சிக்கு கடிதம் தந்திருக்கிறேன்.
ஆனால் அதை கட்ட முடியாது என்று சொன்னார்கள், பின்னர் நீதிமன்றத்தை நாடிய நிலையில் சமூக நலக்கூடத்தை கட்ட அரசு டெண்டர் கோரியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. எனவே ஒரு வார காலத்திற்குள் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு ஓராண்டிற்குள் நவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்டபம் அமைய இருக்கிறது.
காலம் தாழ்ந்தாலும் வரவேற்கத்தக்கது
காவிரி நீருக்காக கர்நாடக முதல்வரை தமிழக முதல்வர் இப்போதாவது சந்திக்க இருப்பதாக செய்தி வந்திருப்பது வரவேற்கத்தக்கது. அவர் சந்திக்கப் போகிறாரா இல்லையா என்பதைத் தாண்டி காலம் கடந்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த முடியு வரவேற்கத்தக்கது. அனைத்து கட்சியினர், விவசாயப் பிரதிநிதிகளை அழைத்து சென்று கர்நாடக முதல்வரை சந்தித்து வலியுறுத்த வேண்டும். அதே போன்று அனைத்து கட்சியினரை அழைத்து சென்று காவிரி நீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது தான் என்னுடைய கோரிக்கை.
வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் நடத்தும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அராஜகத்தில் ஈடுபடுகின்றனர். வேலூரில் மாணவர்கள் மீது நடத்தப்பட்டிருக்கும் தடியடி கண்டிக்கத்தக்கது. கட்டண உயர்வை கண்டித்து போராடியவர்கள் மீது வழக்கு போட்டு சிறையில் அடைத்திருப்பவர்களை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்துக் கட்சி கூட்டம்
பிப்ரவரி 6ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். ஏற்கனவே நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்ட முடிவின்படியே மறியல் போராட்டம் நடைபெற்றது.
அதிமுக ஆட்சி நீடிக்காது
18 எம்எல்ஏக்கள் வழக்கில் விசாரணை முடிந்துவிட்டது, தீர்ப்பு தேதி தான் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் அந்த வழக்கின் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம், தீர்ப்பு வரும் பட்சத்தில் தமிழகத்தில் தற்போது நடக்கும் குதிரை பேர ஆட்சி தொடராது என்பது மட்டும் நிச்சயம்.
குட்கா வழக்கு என்பது திமுகவை சேர்ந்த 21 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். இதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியுள்ளோம். அதிமுகவை எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் மீது தொடரப்பட்ட வழக்கும் நிலுவையில் இருக்கிறது. பிப்ரவரி 11 முதல் அந்த வழக்கும் விசாரணைக்கு வர இருக்கிறது.
சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்
அதிமுக எம்எல்ஏவை தாக்கியவர் உயிரிழந்தது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக கேட்டுக் கொள்கிறது. உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்துவிட்டாரா என்ற கேள்விக்கு அதை அவரிடமே போய் கேட்டுக் கொள்ளுங்கள் என்று ஸ்டாலின் பதிலளித்தார்.