அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்தப்பட வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்தப்பட வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளது:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிக்கு நேற்று நேரில் சென்று அங்கிருந்த பல புத்தகக்கடைகளை பார்வையிட்டு, ஏராளமான புத்தகங்களை வாங்கினேன். ஒரு நல்ல புத்தகம் என்பது படிப்பவரின் சிந்தனையைத் தூண்டி, அவர்களை வேறொரு உலகத்துக்கு அழைத்துச் செல்லும். இலக்கியவாதிகள் பலர் நிறைந்துள்ள தி.மு.கழகம், இலக்கியம், புத்தகங்கள்,வாசிப்புத்தன்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து, எப்போதும் அவற்றை அங்கீகரித்து வரும் இயக்கம்.
"பொது நூலகங்களுக்கு" என்று தனியாக இயக்குனரகத்தை 1972ல் தோற்றுவித்தது திமுக அரசு. அதுமட்டுமின்றி, அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் கட்டித் தந்ததும், கன்னிமாரா பொது நூலகத்தை கம்ப்யூட்டர் மயமாக்கியதும், அனைத்து மாவட்டங்கள் மற்றும் தாலுகாக்களிலும்
நூலகங்களை கட்டித் தந்து, அவற்றில் "சிவில் சர்வீஸஸ் ஸ்டெடி சர்க்கிள்" களை உருவாக்கியதும் திமுக தான்.
கடந்த முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, பொது நூலகங்களில் மக்களின் பயன்பாட்டுக்காக ரூ 36 கோடிகள் செலவிடப்பட்டு 12,447 புத்தகங்கள் வாங்கப்பட்டன. மேலும் 100 கிராம நூலங்களை, கிளை நூலகங்களாக தரம் உயர்த்தி, 47நூலகங்களுக்கு புதிய கட்டிடங்களையும் கட்டித் தந்தோம். "அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி" திட்டத்தின் கீழ் கிராமந்தோறும் நூலகங்கள் அமைக்கப்பட்டன.
ஒவ்வொரு நூலக பயன்பாட்டுக்காகவும் தலா 1000 தமிழ்ப் புத்தகங்களை வாங்க அனுமதி வழங்கி, நூலகக் கட்டிடங்களை கட்ட ரூ.50 லட்சமும், புத்தகங்கள் வாங்க ரூ. 50 லட்சமும் நிதிஒதுக்கீடு செய்தோம்.
ஆனால் அதிமுக ஆட்சியில், இலக்கியம் மற்றும் எழுத்தாளர்களின் அவல நிலை இன்றைக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. புத்தகக் கண்காட்சியை பார்த்து முடித்து விட்டு வெளியே வந்து பத்திரிக்கையாளிடம் பேசிய போது, திமுக அரசு கொண்டு வந்த நூலகங்களை அதிமுக அரசு முடக்கி விட்டது, மேலும் அண்ணா நூற்றாண்டு நூலகம் எந்தளவுக்கு புறக்கணிக்கப்பட்டது என்பதை நீங்களே பார்த்தீர்கள்" என்று குறிப்பிட்டேன்.
திமுக ஆட்சியின் போது, "தமிழ்நாடு புத்தகப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் தொழிலாளர் நல வாரியம்" உருவாக்கப்பட்டு அதற்காக 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. புத்தக வாசிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வை தமிழக மக்களிடையே ஏற்படுத்த வேண்டியது அவசியமானது. உண்மையில், இது போன்ற புத்தகக் கண்காட்சிகள் அனைத்து மாவட்டங்களிலும் அவசியம் நடத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.