தலைதூக்கும் கெயில் திட்டம்... போராட தயங்கமாட்டோம்.. மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை!
கெயில் திட்டத்தை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டார் திமுக போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: கெயில் திட்டத்தை கொண்டு வர முயன்றால் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து திமுக போராட்டத்தில் ஈடுபடும் என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் சேலம், கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக 925 கி.மீ தூரத்திற்கு எரிவாயுக் குழாய்கள் பதிக்கும் திட்டத்தை கெயில் நிறுவனம் செயல்படுத்திவருகிறது. இந்தத் திட்டத்துக்காக விவசாய நிலங்கள் வழியாகக் குழாய்கள் பதிக்க விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக, அந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து, கெயில் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசின் உத்தரவுக்கு தடை அளிக்கப்பட்டது. இருப்பினும், விவசாயிகளின் தொடர் எதிர்ப்பால் திட்டம் சரிவர செயல்படுத்தப்படாத நிலையில் இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கெயில் திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, கெயில் திட்டத்தை விரைவுபடுத்துமாறும் விவசாயிகளை நேரில் அழைத்துச் சென்று விளக்க வேண்டும்' என்று தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் விவசாயிகள் மத்தியில் மீண்டும் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது : கெயில் திட்டத்தை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் முயன்றால் திமுக போராடும். தமிழகத்தில் விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது மேற்கொண்டு வருகிறது.
விவசாயிகளின் எதிர்ப்பை மீறி கெயில் குழாய் பதிக்கும் முடிவை எடுத்துள்ள மத்திய அரசு அதனை கைவிட வேண்டும். விவசாயிகளை பாதிக்காத வகையில் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கெயில் திட்டத்தால் கல்வி நிறுவனங்கள், வீடுகள், தென்னை மரங்கள் அதிகமாக பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.