கச்சத்தீவை தாரை வார்த்தது யார்?.. சட்டசபையில் ஸ்டாலினிடம் ஜெயக்குமார் பொளேர் கேள்வி!
கச்சத்தீவை தாரை வார்த்தது யார் என சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியதால் அமளி ஏற்பட்டது.
சென்னை: கச்சத்தீவை தாரை வார்த்தது யார் என சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். இதனால் திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் சட்டசபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
தமிழக சட்டசபைக் கூட்டம் 3 நாள் விடுமுறைக்குப் பின் இன்று மீண்டும் கூடியது. அப்போது இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஜெயக்குமார், கச்சத்தீவை தார் வார்த்தது யார் என ஸ்டாலினை பார்த்துக் கேட்டார்.

திமுகவினர் அமளி
அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த கேள்விக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் தமிழக சட்டசபையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது.

போராட்டங்களை மறைக்கக்கூடாது
இதைதொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமாரின் கேள்விக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விளக்கமளித்தார். அப்போது கச்சத்தீவை இலங்கைக்கு தரக்கூடாது என திமுக நடத்திய போராட்டங்களை மறைக்கக்கூடாது என ஸ்டாலின் கூறினார்.

கருணாநிதி கடிதம் எழுதினார்
கச்சத்தீவை இலங்கைக்கு தரக்கூடாது 1974ஆம் ஆண்டு கருணாநிதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு கடிதம் எழுதியதாகவும் ஸ்டாலின் சட்டசபையில் சுட்டிக்காட்டினார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரவார்க்கக்கூடாது என அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

மத்திய அரசின் அதிகாரம்
அப்போதைய மத்திய அரசின் அதிகாரத்தால் தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதாகவும் ஸ்டாலின் அமைச்சர் ஜெயக்குமாரின் கேள்விக்கு விளக்கமளித்தார். திமுக தான் கச்சத்தீவை தாரை வார்த்ததாக கூறியதற்கும் அவர் கண்டனம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications