அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 7 லட்சம் பேர் ஸ்டிரைக் - எஸ்மா சட்டத்தை அமல் படுத்த அரசு ஆலோசனை
நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை மீறி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் 7 லட்சம் பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்மா சட்டத்தை அமல்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது.
சென்னை: அரசு விடுத்த எச்சரிக்கை, நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு ஆகியவற்றை மீறி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் 7 லட்சம் பேர் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.
அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அரசு ஊழியர்கள் மீது எஸ்மா சட்டத்தை அமல்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது.
இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பாக 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
செப்டம்பர் 7ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. இதை முறியடிக்கும் வகையில் கடந்த 6ம் தேதி ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு வார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ சங்கம் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் புதிய அணி உருவாக்கப்பட்டது. அவர்களின் வழிகாட்டுதலின்படி, கடந்த 7ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் நடந்தது. அதில் 7 லட்சம் பேர் பங்கேற்றனர்.
இதையடுத்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை போராட்டத்துக்கு தடை விதித்தது. அதற்கேற்ப 8ம் தேதி நடக்க இருந்த மறியல் போராட்டம் ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டது. இந்தபோராட்டங்களில் சுமார் 7 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு அன்று மாலையே விடுவிக்கப்பட்டனர்.
பலகட்ட போராட்டம்
நீதிமன்றம் தடை காரணமாக மீண்டும் ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக் குழு சென்னையில் கூடியது. அதில் 6 ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும், 11ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர்வது, அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், 12ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், 13ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்பு மற்றும் உள்ளிருப்பு போராட்டங்களை நடத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
அரசு நோட்டீஸ்
இதற்கிடையே, 7ம் தேதி மற்றும் 8ம் தேதிகளில் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 9ம் தேதி அரசு தரப்பில் நோட்டீஸ்(17-ஏ) அனுப்பி மிரட்டல் விடுத்தது. ஆனால், ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அந்த நோட்டீஸ் குறித்து கவலைப்படவில்லை.
அரசு உத்தரவு
நேற்று காலை தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் சுமார் 7 லட்சம் பேர் பங்கேற்றனர். ஜாக்டோ-ஜியோ அமைப்பில் தற்போது 95 சங்கங்கள் இணைந்து வேலை நிறுத்தம் நடத்தப்படுகிறது. ஆனால், அரசு உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்
எஸ்மா, டெஸ்மா போன்றவற்றை கொண்டு வந்தாலும் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். எங்கள் கோரிக்கை மீது முதல்வர் உறுதி மொழி அளிக்க வேண்டும். இல்லை என்றால் தொடரும். இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடக்கும். அதற்கு பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம். அரசின் எந்த மிரட்டலுக்கும் பயப்பட மாட்டோம் என்று அரசு ஊழியர்கள் கூறியுள்ளனர்.
எஸ்மா சட்டம் பாயும்
கடும் கட்டுப்பாடு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பட்டியலை அரசு தயார் செய்துள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் 65 ஆயிரம் பேரும், ஆசிரியர்கள் 60 ஆயிரம் பேரும் நேற்று பணிக்கு வரவில்லை. விடுப்பு எடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. எஸ்மா சட்டத்தை அமல்படுத்தலாமா, மெமோ கொடுக்கலாமா என அரசு ஆலோசித்து வருகிறது.