உயர்திரு மாணவ மாணவிகள்.. ஜல்லிக்கட்டு அழைப்பிதழில் பெயரை போட்டு அசத்திய அவனியாபுரம் மக்கள்
ஜல்லிக்கட்டு ஆதரவாக போராடிய மாணவர்களின் பெயரை ஜல்லிக்கட்டு அழைப்பிதழில் போட்டு அவனியாபுரம் மக்கள் அசத்தியுள்ளனர்.
அவனியாபுரம்: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய மாணவ, மாணவிகளைக் கவுரவப்படுத்தும் வகையில் உயர்திரு மாணவ மாணவிகள் என்று ஜல்லிக்கட்டு விழா அழைப்பிதழில் அச்சிட்டு அவனியாபுரம் மக்கள் அசத்தியுள்ளனர்.
பொங்கல் திருவிழாவின் போது ஜல்லிக்கட்டை நடத்த விடாமல் மத்திய அரசும், சுப்ரீம் கோர்ட்டும் தடை விதித்திருந்த நிலையில், இந்த ஆண்டு எப்படியும் ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என்று கோரி தொடர் போராட்டங்களை மாணவிகள், மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள் நடத்தினார்கள். சென்னை, மதுரை, அலங்காநல்லூர், அவனியாபுரம், திருச்சி, திண்டுக்கல், கோவை, ஈரோடு, நெல்லை என தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு புரட்சியே நடைபெற்றது.
இதனையடுத்து, ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் தமிழக அரசு சட்டத்தை இயற்றியது. இதனால் ஜல்லிக்கட்டுக்கான தடை முழுவதும் நீங்கியதாக தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம் பாலமேடு உள்ளிட்ட இடங்களில் வரும் பிப்ரவரியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் வரும் 5ம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா நடத்த ஊர் மக்களால் முடிவு செய்யப்பட்டது. அதற்கான அழைப்பிதழும் அச்சிடப்பட்டது. இதில் ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்களைக் கவுரவிக்கும் வகையில், உயர்திரு.மாணவ, மாணவிகள் என்று அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் மாணவர்களின் பங்கு அதி முக்கியமாக இருந்தது. எனவே, அவர்களை கவுரவிக்கும் வகையில் அவனியாபுரம் மக்கள் அழைப்பிதழில் பெயரை போட்டு அசத்தியுள்ளனர்.