சோதனை மேல் சோதனை...தலைமுடியை கூட ஆராய்ந்த அதிகாரிகள்... 'நீட்' தேர்வு அதகளம்
சென்னை: தமிழகம் முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வான 'நீட்' தேர்வை 88,000 மாணவர்கள் இன்று எழுதினர்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் உயர்கல்வியிலும் பள்ளிக் கல்வியிலும் பல மாற்றங்களைக் கொண்டுவந்தது. அதன் ஒரு முயற்சியாக நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கு ஒரே நுழைவுத் தேர்வை மாணவர்கள் எழுத வேண்டும் என்று மத்திய அரசு கூறியது.
நீட் தேர்வு
இதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. கடந்த ஆண்டு தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத விலக்கு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு, தமிழக மாணார்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என கடைசி நிமிடம் வரை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் நிலவி வரும் குழப்பமான அரசியல் சூழலால் 'நீட்' தேர்வை எழுத வேண்டிய கட்டாயத்துக்கு மாணவர்கள் உள்ளாக்கப்பட்டனர். இன்று 88,000 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
ஆதார் கார்டு
இந்நிலையில் இன்று நடந்த தேர்வில் பலத்த கெடுபிடிகள் கடைபிடிக்கப்பட்டன. நீதிமன்றம் ஆதார் கார்டை எல்லா விஷயங்களுக்கும் கட்டாயமாக்கக்கூடாது என்று வலியுறுத்திய போதும், இன்று தேர்வு எழுதிய மாணவர்களிடம் ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என கூறியுள்ளனர்.
மெட்டல் டிடெக்டர்
மேலும் மாணவர்களை சோதனைக்குட்படுத்துகிறோம் என்கிற பெயரில் தலை முதல் கால் வரை மெட்டல் டிடெக்டர் வைத்து சோதித்தனர். அதிகபட்ச கொடுமையாக தலைவாரி பின்னலிட்ட மாணவிகள் சடை முடிகளிலெல்லாம் சோதித்துப் பார்த்தனர்.
சமூக நீதிக்கு ஆப்பு
இந்தியா முழுவதும் ஒரே தரமான கல்வி இல்லை. ஒரே மாதிரியான பாடத்திட்டமும் இல்ல. ஆனால் அனைவருக்கும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு என்பது மாணவர்கள் மீதான வன்முறை என்றும், சமூக நீதியை குலைக்கும் செயல் எனவும் சமூக ஆர்வலர்கள் சாடி வருகின்றனர். இன்று தேர்வு எழுதியுள்ள 88,000 மாணவர்களில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவ்ர்கள் எத்தனை சதவிதம் பேர் உள்ளனர் என்பது கேள்விக்குறியே!