3 மாணவிகள் கொலையா? - நீதி விசாரணை மூலம் உண்மையை கண்டறிய வேண்டும்- கருணாநிதி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று மருத்துவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் உரிய நீதி விசாரணை நடத்த திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரது அறிக்கையில், "விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவிகள் சரண்யா, மோனிஷா, பிரியங்கா ஆகியோர் 23 ஆம் தேதி அன்று கிணற்றில் பிணமாக மிதந்துள்ளார்கள். கைகள் கட்டப்பட்டும், உடம்பில் காயங்களோடும் அவர்கள் இருந்ததாகச் செய்திகள் வருகின்றன.
இவர்கள் இறந்ததை தற்கொலை என்று கூறி மறைக்க முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இவர்களின் பெற்றோரும், மற்றவர்களும் அதை மறுக்கின்றனர். கல்லூரி நிர்வாகத்தின் மீது, அதிகக் கட்டணம் வசூலிப்பதாகவும், மாணவிகளைக் கொடுமைப்படுத்தியதாகவும் புகார் கூறப்படுகிறது.
அரசு அதிகாரிகளைக் கொண்டு விசாரணை என்ற பெயரில் உண்மைகளை மறைக்க முயற்சிப்பதாகக் குறை கூறுகிறார்கள். இறந்த மாணவிகள் மூவரும் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்திற்குத் தலைமை தாங்கியிருக்கிறார்கள். இந்தக் கல்லூரி பற்றி பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தும் அமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கைகள் வந்துள்ளன.
கொலையா, தற்கொலையா என்பதை உலகத்திற்கு அறிவிக்க வேண்டும். தற்கொலை என்றால்கூட, அதற்கு என்ன காரணம் என்பதையும் தெளிவாக்க வேண்டும். உயிரிழந்த அந்த மூன்று மாணவிகளின் குடும்பத்திற்கு அரசின் சார்பிலும், நிர்வாகத்தின் சார்பிலும் நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும்.
பல்வேறு அமைப்புகள் சார்பிலும், கட்சிகள் சார்பிலும் கேட்டுக் கொண்டவாறு, இதுகுறித்து தமிழக அரசே பதவியிலே உள்ள உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு சட்டப்படியான விசாரணை நடத்தி, உண்மைகளை உலகத்திற்கு அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.