சூப்பர்மார்க்கெட்டுகளின் முன்னோடி சுபிக்ஷா... கோடிகளை சுருட்டிய சுப்ரமணியனின் தில்லுமுல்லுகள்!
சுபிக்ஷா பல்பொருள் அங்காடி முதல் நிதி நிறுவனம் வரை சுப்ரமணியனின் மோசடிகள்
Recommended Video
சென்னை : சுபிக்ஷா பல்பொருள் அங்காடி முதல் நிதி நிறுவனம் வரை சுப்ரமணியனின் மோசடி பட்டியல். மூதலீட்டாளர்களிடம் ரூ. 150 கோடி மோசடி செய்த விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சுப்ரமணியன் இன்று மீண்டும் வங்கிகளிடம் மோசடியாக கடன் பெற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் தற்போது தெருவிற்கு ஒரு சூப்பர்மார்க்கெட்டுகள் வந்தாலும் சூப்பர்மார்க்கெட்டுகளின் முன்னோடியாக இருந்தது சுபிக்ஷா நிறுவனம். சென்னை ஐஐடி, ஹைதராபாத் ஐஐஎம்மில் படித்த பட்டதாரியான சுபிக்ஷா சுப்ரமணியன் முதன் முதலில் விஸ்வப்ரியா என்ற நிதிநிறுவனத்தை தொடங்கினார்.
இதனையடுத்து 1997ம் ஆண்டு திருவான்மியூரில் சுபிக்ஷா சூப்பர்மார்க்கெட்டை தொடங்கி காய்கறி, பழங்கள், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் விற்பனையை இதில் செய்து வந்தார். சூப்பர் மார்க்கெட்டுகளை மக்கள் கண்டிராத காலம் என்பதால் 2003 -07 காலகட்டத்தில் சென்னையில் மட்டும் 47 கடைகளையும், கர்நாடகா, ஆந்திரா, குஜராத்,டெல்லி உள்ளிட்ட வெளிமாநிலங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளையும் திறந்தார் சுப்ரமணியன்.
2009ல் இழுத்து மூடப்பட்ட கடைகள்
சூப்பர் மார்க்கெட்டுகளை நடத்த வங்கியில் இருந்து ரூ. 800 கோடி கடன் பெற்றார். சுபிக்ஷாவின் லாபத்தை வேறு வழிகளில் முதலீடு செய்ததால் கடன் பாக்கி ஏற்பட்டு 2009ம் ஆண்டில் சுமார் ஆயிரத்து 600 கடைகளை இழுத்து மூடினார்.
முதலீட்டாளர்களை மோசடி செய்த சுப்ரமணியன்
ஊழியர்களுக்கு சம்பள பாக்கி, முதலீட்டாளர்களுக்கு கடன் பாக்கி என்று சுப்ரமணியன் மீது வழக்குகளும், வங்கிகளின் நோட்டீஸ்களும் பாய்ந்தன. ரூ.225 கோடி மோசடி செய்தது நிரூபிக்கப்பட்டதால் ஏற்கனவே 2015ல் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதி நிறுவனம் நடத்தியும் மோசடி
சூப்பர் மார்க்கெட் வீழ்ச்சியடைந்தாலும் தொடர்ந்து விஸ்வப்ரியா நிதி நிறுவனம் மூலம் அதிக வட்டி தருவதாகக் கூறி 5 ஆயிரம் முதலீட்டாளர்களை பெற்றார். ஆனால் அதிலும் சரிவர நிதியை திருப்பித் தரவில்லை என்று புகார்கள் எழுந்தன. சுபிக்ஷா நிறுவனத்தை தொடங்கிய வேகத்திலேயே சுப்ரமணியன் 68 போலி நிறுவனங்களைத் தொடங்கியுள்ளார். இவற்றிற்கு அலுவலகம் கிடையாது, பேப்பர் அளவில் மட்டுமே இவை கணக்கு காட்டப்பட்டு அதன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்துள்ளார்.
வங்கிகளை ஏமாற்றி கடன்
மோசடிகளின் புகலிடமாக இருந்த சுப்ரமணியன் தற்போது 13 வங்கிகளை ஏமாற்றி ரூ. 750 கடன் வாங்கி ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த மோசடியில் தான் தற்போது அமலாக்கத்துறை சுப்ரமணியனை கைது செய்துள்ளது.