சுப்பிரமணியன் மர்மச்சாவு... தலைக்கு வந்த கத்தி தலைப்பாகையோடு சென்றது... விஜயபாஸ்கர் பெருமூச்சு!
நாமக்கல்லை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான சுப்பிரமணியன் மர்மமான முறையில் இறந்ததால் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை இறுக்கிய பிடிகள் தற்போது விலக வாய்ப்புகள் உள்ளது.
சென்னை: நாமக்கல்லை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான சுப்பிரமணியன் மர்மமான முறையில் இறந்ததால் வருமான வரித் துறை விசாரணை என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை இறுக்கிய பிடிகள் தற்போது விலக வாய்ப்புகள் உள்ளன.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது எப்படியாயினும் ஜெயித்து விட்டு முதல்வர் ஆக வேண்டும் என்ற வெறியில் தொகுதி முழுவதும் சர்க்கஸ் ஜோக்கர் போல் தொப்பி அணிந்து கொண்டு டிடிவி தினகரன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். எனினும் சசிகலா மீதான வெறுப்புகள் தன் மீது திரும்பக் கூடுமோ என்ற பயத்தில் ஜெயலலிதா பெயரை சொல்லி கொள்ளையடித்த பணத்தை செலவு செய்ய விரும்பினார்.
ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு ரூ.4000 முதல் ரூ.7000 வரையில் பணமும், எடைக்கு எடை தங்கம் கொடுக்க தயாராக இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை துணை வேந்தர் கீதா லட்சுமி உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.
முக்கிய ஆவணங்கள்
சோதனையின் போது ரூ.89 கோடி பணம், முக்கிய ஆவணங்களை விஜயபாஸ்கரின் வீட்டில் இருந்து அதிகாரிகள் கைப்பற்றினர். இந்நிலையில் மேற்கண்ட மூவருக்கும் சம்மன் அனுப்பிய அதிகாரிகள் நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர். மேற்கண்டோரிடம் கிட்டத்தட்ட 2 நாள்களாக விசாரணை நடத்தப்பட்டது.
துறை ரீதியான முறைகேடுகள்
இந்நிலையில் கீதாலட்சுமியிடம் நடத்திய விசாரணையில் ஆர்.கே.நகர் தொகுதி மட்டுமல்லாது விஜயபாஸ்கரும், கீதாவும் சேர்ந்து துறை ரீதியிலான பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளது தெரியவந்தது. மருத்துவ நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது, மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது, ஒப்பந்த பணிகள் அளிப்பது உள்ளிட்டவைகளில் பல்வேறு கோடிக்கணக்கிலான பணம் சுருட்டப்பட்டது தெரியவந்தது.
எந்நேரத்திலும் விஜயபாஸ்கர் கைது
இந்த சமயத்தில் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் எதிர்க்கட்சிகளும், மத்திய அரசும் விஜயபாஸ்கரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வருகின்றன. இதனால் அவர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழலே நிலவி வருகிறது.
பீதியில் அமைச்சர்கள்
அதுமட்டுமல்லாமல் தற்போது சேகர் ரெட்டியின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் ரூ.300 கோடி லஞ்சம் பெற்ற அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் அமைச்சர்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
ஒப்பந்ததாரர் மர்ம மரணம்
இந்நிலையில் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரும், சுகாதார துறை தொடர்பான அனைத்து அரசு ஒப்பந்தகளையும் செய்து வந்தவருமான நாமக்கல் சுப்பிரமணியன் தற்போது அவரது தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனால் பல்வேறு உண்மைகளை வெளிக்கொணர்வதில் வருமான வரித்துறையினருக்கு தொய்வு ஏற்பட்டுள்ளது.
யார் இந்த சுப்பிரமணியம்?
விஜயபாஸ்கரின் நிழலாக இருந்து கொண்டு அவரது அத்துணை தில்லு முல்லுகள் பற்றியும் அறிந்தவர். அவரது ஆசியுடன் மருத்துவ துறை ரீதியிலான ஒப்பந்தங்களை சுப்பிரமணியம் பெற்று வந்தார். விஜயபாஸ்கரின் கல்லூரிகள், கட்டுமான பணிகள், அவரது மனைவி ரம்யாவின் கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு பின்புலமாக இருந்து செயல்பட்டு வந்தவர் சுப்பிரமணியன். கிட்டத்தட்ட விஜயபாஸ்கரின் பினாமி என்று சொல்லும் அளவுக்கு நெருக்கமானவர்கள். விஜயபாஸ்கர் குறித்து துறை ரீதியான முறைகேடுகளை ஒன்றுவிடாமல் ஃபிங்கர் டிப்பில் வைத்திருந்தவர். இத்தகைய முக்கியமான நபர் தற்போது மர்மமான முறையில் இறந்து விட்டதால் வருமான வரித்துறைக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
அப்ரூவராகியிருப்பார்
திருச்சி, சேலத்தைச் சேர்ந்த 8 அதிகாரிகளைக் கொண்ட குழுதான் சுப்பிரமணியன் வீட்டில் வருமான வரி சோதனையை நடத்தியது. மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு அவரை அப்ரூவராக மாற்றியிருந்தால் விஜயபாஸ்கரும் தினகரனுக்கு துணையாக சிறை சென்றிருப்பார். ஆனால் அதற்கு முன்னதாக சுப்பிரமணியன் மர்ம மரணம் அடைந்துவிட்டதால் அமைச்சர் விஜயபாஸ்கரின் கழுத்தில் இறுக்கப்பட்ட பிடி தற்போது லேசாக தளர்வடைந்துள்ளது. மேலும் விஜயபாஸ்கரின் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு சாட்சியம் இல்லாததால் விசாரணையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது.