ரஜினி அரசியல் பிரவேசம்... டிசம்பர் 12ல் பரபர அறிவிப்பு
வரும் டிசம்பர் 12ல் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்க இருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வரும் டிசம்பர் 12ல், அவரின் பிறந்தநாளன்று தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மே மாதம் 15ம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்கள் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்தார். 12 வருடங்களுக்குப் பிறகு நடிகர் ரஜினி, ரசிகர்களை நேரில் சந்தித்ததால் தமிழக அரசியலில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
அந்தச் சந்திப்பின்போது, "ஆண்டவன் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்" என்று ரஜினி கூறினார். அது பல அரசியல் கட்சித் தலைவர்களின் தூக்கத்தைக் கெடுத்தது.
ரஜினி அரசியலுக்கு வந்தால் எங்களுக்குப் பாதிப்பில்லை, இது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று கூறாத பேட்டியளிக்காத அரசியல் தலைவர்கள் இல்லை என்ற ரீதியில் இருந்தது தமிழக அரசியல்.
ரஜினி அரசியலுக்கு வரவேண்டும், அவர் பாஜகவில் இணைய வேண்டும் என பலரும் வெளிப்படையாகவே கூறினார்கள். ரசிகர்கள் சந்திப்பின் கடைசி நாளில் ஏதாவது முக்கிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், "போர் வரும்போது அதை எதிர்கொள்வோம்" என வழக்கம்போல் பூடகமாக பேசி, ரஜினி முற்றுப்புள்ளி வைத்தார்.
பிறந்த நாளில் அரசியல் பிரவேசம்
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த், வரும் டிசம்பர் 12ம் தேதி அவரின் பிறந்தநாளன்று தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'காலா'வில் மும்முரம்
தற்போது மும்பையில் 'காலா' படப்பிடிப்பில் ரஜினி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். நடிப்பில் மும்முரமாக இருந்தாலும் அரசியல் குறித்தும் ரஜினிகாந்த் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்.
நெருங்கிய நண்பர்கள் சந்திப்பு
படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் ரஜினிக்கு நெருங்கிய அரசியல் நண்பர்கள், தலைவர்கள் அவரை நேரில் சந்தித்துப் பேசுகிறார்கள். அவர்கள், தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை விளக்கி ரஜினியிடம் ஆலோசனை வழங்குகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் பிரவேசம் உறுதி
ரஜினிகாந்த் முழுமையாக தமிழக அரசியலை ஆராய்ந்து வருகிறார் என்றும் அதனால் இந்த முறை அவர் நிச்சயமாக மிக விரைவில் அரசியலுக்குள் பிரவேசிப்பார் என்றும் கூறுகிறார்கள் ரஜினியின் கோடம்பாக்க நண்பர்கள்.
ரசிகர் மன்ற நிர்வாகிகள் உறுதி
ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஊடகங்களில் விவாத நிகழ்ச்சிகளில் பேசக்கூடாது என கெடுபிடி விதிக்கப்பட்டிருந்தாலும் அவரது ரசிகர் மன்றத்தின் மூத்த நிர்வாகிகள் டிசம்பர் 12-ம் தேதி ரஜினிகாந்த் மிகப்பெரிய அறிவிப்பை வெளியிடுவார் என்றே நம்பிக்கையோடு தெரிவிக்கிறார்கள்.
ரஜினியிடம் தீர்க்கம்
ரஜினிகாந்துடன் சினிமாவில் நெருங்கிப் பணியாற்றிய அவரின் நண்பர் ஒருவர் கூறுகையில், " ரஜினி சில திட்டங்களை வைத்திருக்கிறார். முன்புபோல் இல்லை ரஜினி. இப்போது அவர் மிகவும் தீர்க்கமாக இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.