பிரேத பரிசோதனையின்போது தனியார் டாக்டர்.. ராம்குமார் தந்தை மனுவை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்
சென்னை: புழல் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த ராம்குமார் பிரேத பரிசோதனையின் போது தனியார் மருத்துவர் ஒருவர் உடன் இருக்க வேண்டும் என்று, ராம்குமாரின் தந்தை பரமசிவம், தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதால் தனியார் மருத்துவர் ஒருவர் பிரேத பரிசோதனையின் போது இருக்க வேண்டும் என்று தந்தை பரமசிவம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 3வது நீதிபதி கிருபாகரனிடம் வழக்கு சென்றது. அதனை விசாரித்த நீதிபதி கிருபாகரன் எய்ம்ஸ் மருத்துவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதனை ஏற்க மறுத்த தந்தை பரமசிவம், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று காலையில் முதல் வழக்காக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரிக்க எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், இந்த மனுவை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், இப்படிப்பட்ட வேண்டுகோள்களை ஏற்றால் மற்ற வழக்குகளிலும் இதேபோன்ற நிலை ஏற்படலாம் என்றும் கூறியது. மேலும் இந்த மனுவை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியது. இதனையடுத்து தந்தை பரமசிவம் தான் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
இனி சென்னை ஹைகோர்ட் உத்தரவு படிதான் ராம்குமாரின் பிரேத பரிசோதனை நடைபெறும். மேலும், ராம்குமாரின் பிரேத பரிசோதனையின் போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் இருக்க வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார். அதன் படி, யார் நியமிக்கப்பட உள்ளார்கள் என்ற விவரம் இனிதான் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications