சுவாதி கொலை வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் கையெழுத்து போட மறுத்த ராம்குமார்
சென்னை : சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ராம்குமார் காவல் முடிந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ராம்குமாரின் கையெழுத்தை ஒப்பிட்டுப் பார்க்க அனுமதி கிடைத்ததை அடுத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். எழும்பூர் நீதிமன்றத்தில் ராம்குமார் கையெழுத்து போட மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பொறியாளர் சுவாதி கடந்த ஜூன் 24ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமாரை என்பவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தில் சுவாதியை படுகொலை செய்ய பயன்படுத்திய அரிவாளை போலீசார் ரயில் நிலையம் அருகே கண்டெடுத்தனர். அதில் இருந்த ரத்த மாதிரியை ஆய்வு செய்தபோது அது சுவாதியுடையது என்று தெரியவந்தது.
இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் ராம்குமாரின் சட்டையில் இருந்த ரத்த மாதிரிகளை ஆய்வு செய்தனர். இதற்கிடையில் ராம்குமாரின் கையெழுத்து மாதிரிகளை ஒப்பிடுதல் குறித்து போலீசார் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இதையடுத்து இந்த வழக்கு கடந்த 8ம் தேதி எழும்பூர் 14வது நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் கோபிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த மாஜிஸ்திரேட், கோபிநாதன் ராம்குமாரின் கையெழுத்து மாதிரியை போலீசார் வரும் 17ம் தேதி நீதிமன்ற வளாகத்திலேயே நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
அதன்படி இன்று எழும்பூர் நீதிமன்ற வளாகத்திற்கு ராம்குமாரை அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். ராம்குமாரின் கையெழுத்து மாதிரியுடன் ஒப்பீடு செய்வதற்காக நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட ராம்குமார் கையெழுத்து போட மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. சூளைமேட்டில் மேன்சன் விண்ணப்பத்தில் தான் கையெழுத்திடவில்லை என்று ராம்குமார் கூறியதாகவும் தெரிகிறது.
எழும்பூர் நீதிமன்றத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 13ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி புழல் மத்திய சிறை வளாகத்தில் போலீசார் ராம்குமாரை நடக்கவைத்தும், ஓட வைத்தும் வீடியோ காட்சி பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.