சுவாதி கொலை வழக்கு: 10 மணி நேரம் நடந்த பரபரப்பு விசாரணையில் பிலால் கூறியது என்ன?
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி, கடந்த ஜூன் 24ம் தேதி காலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபர் கடந்த 1ம் தேதி கைது செய்யப்பட்டார்.
ராம்குமாரை கைது செய்ய முயன்றபோது பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். பின்னர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு, 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ராம்குமாரை 3 நாட்களுக்கு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, 13ம் தேதி மாலை முதல் ராம்குமாரிடம் நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் தேவராஜ் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
நேருக்கு நேர் விசாரணை
நேற்று ராம்குமாரை நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் வைத்துக் கொண்டு, சுவாதியின் நெருங்கிய நண்பரான முகமது பிலால் சித்திக்கை மதிய நேரத்தில், விசாரணைக்கு அழைத்திருந்தனர். ராம்குமார் குறித்து பிலாலிடம் சில தகவல்களை கேட்டனர்.
10 மணி நேரம் நீடித்தது
ராம்குமாரிடம், முகமது பிலாலை நேரில் காட்டிய பின்னர் ஒரே அறையில் வைத்து இருவரிடமும் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை 10 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அப்போது, சுவாதியுடன் அவருக்கு உள்ள நட்பு மற்றும் சுவாதிக்கு ஏற்பட்ட பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
பதிலளிக்க மறுப்பு
நேற்றிரவு 10 மணியளவில்தான் பிலால் வீட்டுக்குச் செல்ல அனுமதியளிக்கப்பட்டார். இதை அவரிடம், காவல் நிலையத்தின் வெளியே நின்ற நிருபர்கள் கேள்விகள் எழுப்பினர். பதில் சொல்ல மறுத்த அவர் தனது இருசக்கர வாகனத்தில் ஏறி சென்றுவிட்டார்.
தொல்லை நபர்
விசாரணை அதிகாரி ஒருவர் கூறிய தகவல்கள் இதோ: தன்பின்னால் ஒருவன் சுற்றி, தொல்லை தருவதாக சுவாதி தன்னிடம் குமுறியிருந்ததாக, முகமது பிலால் சித்திக் ஏற்கனவே நடைபெற்ற விசாரணையில் தெரிவித்திருந்தார். அப்படி சுற்றிய நபரை தான் பார்த்திருந்ததாகவும் பிலால் கூறியிருந்தார். எனவே, முகமது பிலால் சித்திக்கிடம், ராம்குமாரை காட்டி இவர்தானா அந்த நபர் என போலீசார் கேட்டுள்ளனர். பிலாலும், தொல்லை தந்தது ராம்குமார்தான் என்று உறுதியாக கூறியுள்ளார்.
செல்போனில் தகவல்
முகமது பிலால் சித்திக்கிடம், சுவாதி சாட் செய்வது வழக்கம். அந்த மெசேஜ்களில், தன்னை ஒருவன் பின் தொடர்ந்து காதல் தொல்லை செய்வதாக கூறியுள்ளாராம். அந்த மெசேஜ்கள் வழக்கில் முக்கிய ஆதாரமாக இருக்கும் என போலீஸ் நம்புகிறது. எனவே முகமது பிலால் சித்திக்கின் செல்போனை போலீசார் வாங்கி வைத்துள்ளனர்.
தந்தையும் சாட்சியம்
புழல் சிறையில் நடந்த, அடையாள அணி வகுப்பின்போது, சுவாதியின் தந்தையும், ராம்குமார்தான் தனது மகளை தொடர்ந்து பின் தொடர்ந்த நபர் என கூறியிருந்தார். ஆனால் அடையாள அணிவகுப்பில் கலந்து கொள்ள முகமது பிலால் சித்திக்கை போலீசார் அழைத்திருக்கவில்லை. தனிப்பட்ட முறையில், அவரிடம் இந்த கேள்வியை தற்போது கேட்டுள்ளனர்.
பாதுகாப்பு வளையம்
சுவாதி கொலை வழக்கில், முகமது பிலால் சித்திக் ஒரு முக்கியமான சாட்சி மற்றும் பல தகவல்களை தெரிந்தவர் என்பதால் அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அவர் எங்கு சென்றாலும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்படுவார் என காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.