தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி.. நீட் தீர்ப்பு பற்றி வழக்கு தொடுத்த டி.கே.ரங்கராஜன் பெருமிதம்
நீட் தீர்ப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளை சொல்லியிருப்பதை அரசு செயல்படுத்த வேண்டும் என டி.கே.ரங்கராஜன் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: நீட் தேர்வு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை என்ன சொல்லியிருக்கிறதோ அதை அரசாங்கம் செயல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கூறியுள்ளார்.
நீட் தேர்வில் தமிழில் கேட்கப்பட்ட கேள்விகளில் பிழை உள்ளதால், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது அமர்வு விசாரித்தனர். விசாரணையில், நீட் தேர்வில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 49 கேள்விகள் பிழையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் மதிப்பெண் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 49 கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் அடிப்படையில் தலா 4 மதிப்பெண்கள் என்ற முறையில் சிபிஎஸ்இ 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும். சிபிஎஸ்இ நீட் தர வரிசை பட்டியலை இரண்டு வாரத்துக்குள் திருத்தி வெளியிட வேண்டும் என இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டனர்.
நீட் தேர்வு வழக்கு தீர்ப்பு குறித்து வழக்கு தொடர்ந்த டி.கே.ரங்கராஜன் ஊடகங்களிடம் கூறுகையில், மார்க்சிஸ்ட் கட்சி நீட் தேர்வு தேவையில்லை என்று கூறி அதற்காக இயக்கமே நடத்தியது. ஆனாலும், நீட் தேர்வு நடந்துகொண்டிருந்தது.
நீட் தேர்வால் இரண்டு குழந்தைகள் தற்கொலை செய்துகொண்ட காட்சி நாம் மறக்கவே முடியாது. பிளஸ் டுவிலே தமிழில் அதிக மதிப்பெண் எடுத்த அந்த மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட அந்த துயரம் தாங்க முடியாத துயரம். இத ஆண்டு 1,34,000 பேர் நீட் தேர்வை எழுதினார்கள். பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளை எப்படியாவது மருத்துவராக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆகவே அவர்கள் குழந்தைகளை நீட் தேர்வை எழுத வைத்தார்கள். அதுவும் அலைகழிக்கப்பட்டார்கள். சிலர் ராஜஸ்தான் அனுப்பப்பட்டார்கள். சிலர் கேரளாவுக்கு அனுப்பப்பட்டார்கள். இந்த சிபிஎஸ் இ என்கிற அமைப்பு எந்த ஒரு ஒழுக்கமுமில்லாத அமைப்பாக பணிகளைச் செய்துகொண்டிருந்தது.
அதில் 24,000 தமிழிலேயே எழுதிய மாணவர்களுடைய கேள்வித்தாள், பிழையான கேள்வித்தாளாக இருந்தது. ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட 49 வினாக்கள், ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண்கள் என்று 196 மதிப்பெண்கள் கிடைக்க வேண்டியது கிடைக்கவில்லை. எங்களுடைய எஸ்எஃப்ஐ, மாணவர் அமைப்பு இந்த அக்கிரமத்தை எங்களிடம் கூறியது. அதே போல் டெக்ஸ் ஃபார் ஆல் என்ற என் ஜிஒ அமைப்பு அவர்கள் இதில் மிகவும் அக்கறை காட்டி எனக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்தார்கள். எங்கள் கட்சி இந்த வழக்கை தொடர வேண்டும் என எனக்கு உத்தரவு கொடுத்தது. ஆகவே இந்த வழக்கை எங்களுடைய வழக்கமான வழக்கறிஞர்கள் ராவண் ரெட்டி மூலமாக அவரது மூத்த வழக்கறிஞர் பிரசாத் ரெட்டி மூலமாக இந்த வழக்கை நாங்கள் தொடர்ந்தோம்.
எங்களுடைய கேள்விகள் சிறப்பாக எங்களுடைய வழக்கறிஞர்களால் மதுரை கிளையில் சிறப்பாக வாதிடப்பட்டது. எதிர் தரப்பில் சிபிஎஸ் இ வழக்கறிஞர், தமிழக அரசின் வழக்கறிஞர், மத்திய அரசினுடைய வழக்கறிஞர்கள், அனைவருமே ஆங்கிலக் கேள்விதான் பொருத்தமானது என்றே பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இந்த டி.கே.ரங்கராஜன் யார் இதற்கு இவர் எதற்கு வருகிறார் என்று அவர்கள் கேள்வி கேட்டார்கள். அவர்களுக்கு பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பற்றிகூட அக்கறையில்லை என்ற நிலைதான் இருந்தது.
எங்களுடைய வாதத்தில் முக்கியமானது இந்த மொழிபெயர்ப்பாளர்கள் யார்? எந்த அகராதியை வைத்து மொழிபெயர்த்தார்கள்? இதையெல்லாம் நீதிபதியே எங்களுடைய வாதத்தைப் பார்த்து அரசைப் பார்த்து கேட்டார். ஆங்கிலத்திலே, கான்வெண்ட் ஆங்கிலம் இருக்கிறது. செண்ட்ரல் போர்ட் ஆங்கிலம் இருக்கிறது. தமிழ்வழியில் கல்வி பயிலக்கூடிய மாணவர்களுக்கான ஆங்கிலம் இருக்கிறது. இதில் எந்த ஆங்கிலத்தில் நீங்கள் கேள்வி கேட்டீர்கள்? எந்த அகராதியை வைத்து மொழிபெயர்த்தீர்கள்? என்ற கேள்விகளுக்கெல்லாம் அவர்களிடம் பதிலே இல்லை.
ஆக தவறான மொழிபெயர்ப்புக்கு, தவறான ஒரு வினாவுக்கு ஒரு சரியான விடை எப்படி எழுத முடியும் என்கிற வினா இயற்கையாகவே எழுந்தது. அது மட்டுமில்லாமல், இந்த முறை கிட்டத்தட்ட 35 ஆயிரம் பேர் பரிட்சை எழுதிய பீகார் மாநிலத்தில் 37 ஆயிரம் தேர்வு பெற்றிருக்கிறார்கள் என்கிற ஒரு விசித்திரம் நடந்திருக்கிறது. இதையெல்லாம் நீதிபதிகளும் உணர்ந்தார்கள். நீதிபதிகளும் வினா கேட்டார்கள் எங்களுடைய வாதத்தையும் ஏற்றுக்கொண்டு இறுதியாக 49 வினாக்களுக்கும் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும். இரண்டு வாரத்துக்குள் மீண்டும் தரவரிசை போட்டு அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
சமதளமாக இருக்கவேண்டுமே தவிர ஒரு மாணவன் தமிழ் மொழியில் படித்தான் என்பதற்காகவே அவன் நீக்கப்பட்ட மாணவனாக மாறிவிடக் கூடாது. ஆகவே அனைவருக்கும் ஒரே ஓடுதளமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஓடு தளமாக இருந்தால்தான் அனைவரும் பெற்றிபெற முடியும் அந்த முறையில், இரண்டு வாரத்துக்குள் தரவரிசைப் பட்டியலை திருத்தி எழுத வேண்டும் என்று உள்ளது. இது மார்க்சிஸ்ட் கட்சிக்கு மட்டும் கிடைத்த வெற்றியாக மட்டுமில்லாமல், இது தமிழ் மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி, தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றார்.
முதல்கட்ட கலந்தாய்வு நடைபெற்றுள்ள நிலையில் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்ற ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்த டி.கே.ரங்கராஜன்,
இந்த விஷயத்தில் அரசாங்கம் நீதிமன்றம் என்ன சொல்லி இருக்கிறதோ அதை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
இந்த தவறுகளுக்கு காரணம் மொழிபெயர்ப்பாளர் பிரச்சனை இல்லை. அரசு எல்லா விஷயத்திலும் அவுட்சோர்சிங் வேலை செய்கிறது. அதனால்தான், மார்க்சிஸ்ட் கட்சி எல்லாவற்றிலும் அவுட்சோர்சிங் பண்ணக்கூடாது என்று வலியுறுத்துகிறது. இந்த தவறு அவுட்சோர்சிங்கின் விளைவு. என்றார்.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் மற்ற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படதா? என்ற கேள்விக்கு பதிலளித்த டி.கே.ரங்கராஜன்,
எந்த மாணவர்களும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் இதைக் கூறுகிறோம். மாணவர்கள் பாதிக்காமல் இருக்க, இந்த தவறை சரி செய்ய அரசு ஒரு கல்லூரிக்கு கூடுதலாக 100 அல்லது 200 இடங்களை கூடுதலாக்கலாம். மருத்துவக் கல்லூரிகள் இங்குதான் அதிகம் ஆக கூடுதலான இடங்களை போட முடியும். எண்ணிக்கையை அதிகப்படுத்த முடியும். அனைவருக்கும் வாய்ப்பு கிடைத்தால் நாட்டு சேவை செய்யக்கூடிய நல்ல மருத்துவர்கள் கிடைப்பார்கள் என்றார்.
இந்த தீர்ப்புக்கு மேல்முறையிட்டில் இடைக்கால தடை ஆணை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு முழுமையாக இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. இதற்கு மேல் உங்களுடைய கேள்வி எதிர் தரப்புக்கு வழி ஏற்படுத்த உதவக்கூடும் என்று கூறினார்.