ரஜினி வரிசையில் சத்யராஜ்.. கன்னட அமைப்புகளிடம் சரணடையும் தமிழ் நடிகர்கள்! இது தேவையா?
இனியாவது, எந்த விஷயத்திலும், நடிகர்கள் கருத்து கூற வேண்டும் என தமிழ் ரசிகர்கள் எதிர்பார்க்காதீர்கள். அது உங்களேயே நாளை வெட்கி தலைகுனிய வைத்துவிடும்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தை தொடர்ந்து, நடிகர் சத்யராஜும் கன்னட அமைப்புகள் மிரட்டலுக்கு பயந்து தங்கள் பட ரிலீசுக்காக மன்னிப்பு கேட்டுள்ளது தமிழக ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பிரச்சினையில், தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது பேசிய ரஜினிகாந்த் 'இந்த திட்டத்தை தடுக்க வந்தால் அவர்களை உதைக்க வேண்டாமா' என்று பேசினார்.
இதற்கு கர்நாடகா ரக்ஷனா வேதிகா அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இனி தமிழ் திரைப்படங்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்று கூறிவந்தனர். இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்த குசேலன் திரைப்படம் ரிலீசான நேரத்தில், அதற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியது.
எனவே, தனது பேச்சுக்கு விளக்கம் அளித்த ரஜினிகாந்த், தான் கர்நாடக மக்களை அவ்வாறு கூறவில்லை. ஒகேனக்கல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வாட்டாள் நாகராஜ் போன்றவர்களைத்தான் அப்படி கூறினேன் என்று கூறியிருந்தார்.
இறங்கிப்போன ரஜினிகாந்த்
ரஜினிகாந்த், கர்நாடக சினிமா வர்த்தக சபை தலைவருக்கு எழுதிய கடிதத்தில், என்னுடைய குசேலன் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாக உள்ளது. கன்னடர்களின் உணர்ச்சிகளைப் புண்படுத்தும் விதமான செயல்களில் நான் ஒருபோதும் ஈடுபட்டதில்லை என்று கூறியிருந்தார். அதேபோல, கன்னட தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த், "இந்த நிகழ்வு எனக்கு பாடத்தை கற்றுத்தந்துள்ளது. இது போன்ற தவறை நான் மீண்டும் செய்யமாட்டேன். கர்நாடகாவில் குசேலன் படத்தை திரையிட அனுமதியுங்கள்" என்றார்.
சத்யராஜ் மீது நம்பிக்கை
இந்த நிலையில்தான் 9 வருடங்கள் முன்பு காவிரி விவகாரத்தில் கர்நாடக அமைப்புகளுக்கு எதிராக பேசிய பேச்சுக்காக சத்யராஜை மன்னிப்பு கேட்க மிரட்டின, கன்னட அமைப்புகள். சத்யராஜ் சுயமரியாதை பேசுபவர், பெரியாரிஸ்ட் என அவராலே அறிவிக்கப்பட்டவர். எனவே ரஜினியை போல அவர் மன்னிப்பு கேட்கமாட்டார் என்பதே பெரும்பாலான தமிழக ரசிகர்கள் எண்ணமாக இருந்தது.
கேலி, கிண்டல்
ஆனால் இன்று சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பேட்டியொன்றில், கன்னட மக்கள் மனது புண்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். இது தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மிரட்டினால் மண்டியிடுவது தமிழ் நடிகர்கள் வாடிக்கை என்ற எக்காள புன்னகை கன்னட அமைப்பினரிடையே ஏற்பட்டுள்ளது.
|
சத்யராஜுக்காக போராட்டம்
சத்யராஜுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கோரி, இந்திய அளவில் தமிழ் நெட்டிசன்கள் நேற்று #Justiceforsathyaraj என்று ஹேஷ்டேக் போட்டு தம் கட்டிக்கொண்டிருந்தனர். ஆனால், சத்யராஜ் பல்டியடித்து மன்னிப்பு கேட்டதை பார்த்து மனமுடைந்த தமிழர்கள் #Shameonyousathyaraj என்ற ஹேஷ்டேக்கை உலவவிட்டுள்ளனர்.
பாகுபலி தரப்பு நெருக்கடி?
தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ள அதே நேரத்தில் இனியும் அப்படித்தான் தமிழர்களுக்காக பேசுவேன் என சத்யராஜ் கூறியுள்ளார். எனவே இனிமேல் பிரச்சினை வரும் என நினைப்போர் தன்னை வைத்து படம் தயாரிக்க வேண்டாம் எனவும் முகத்தில் அறைந்ததை போல கூறியுள்ளார். இதை வைத்து பார்க்கும்போது, பாகுபலி தயாரிப்பு தரப்பிலிருந்து சத்யராஜுக்கு கடும் நெருக்கடி கொடுத்தே இந்த மன்னிப்பு கடிதம் வாசிக்க வைக்கப்பட்டிருக்கும் என தெரிகிறது.
|
தமிழகத்தில் ரிலீஸ் கூடாது
கர்நாடகாவில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில்தான் பாகுபலி-2 ரிலீஸ் ஆகிறது. எனவே தமிழக திரையரங்குகளை ஒப்பிட்டால் அங்கு வெளியாக உள்ள திரையரங்குகள் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆனாலும் அந்த வியாபாரத்திற்காக சத்யராஜ் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு மன்னிப்பு கேட்கவைக்கப்பட்டுள்ளார். இதற்காக, தமிழகத்தில் பாகுபலி2 படத்தை ரிலீஸ் செய்ய தமிழர்கள் அனுமதிக்க கூடாது என்ற கோஷமும் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது.
மன்னிப்பு தவிர்த்திருக்கலாமே
கடந்த கால பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளதன் மூலம், சத்யராஜ், கன்னட அமைப்பினருக்கு எதிரான நிலைப்பாட்டில் தவறிவிட்டார். போலவே, கன்னட அமைப்பினர் செய்தது நியாயம் என்று கூறுவதை போல அமைந்துவிட்டது அவரது பேட்டி. எனவே சத்யராஜ் வருத்தம் தெரிவிக்காமலேயே தட்டி கழித்திருக்கலாம். கன்னட நடிகர்கள் தமிழர்கள் குறித்து எவ்வளவோ பேசியும், அவர்கள் நடித்த படங்கள் தமிழகத்தில் டப்பிங்கில் ரிலீஸ் ஆகிக்கொண்டுதான் உள்ளது. அவர்கள் என்றுமே மன்னிப்பு கேட்தில்லை. ஆனால் சொற்ப மார்க்கெட் நலனுக்காக தமிழ் நடிகர்கள் இப்படி பொத்தென கன்னட அமைப்பினர் கால்களில் விழுவது தமிழர்களுக்கே இழுக்கை ஏற்படுத்துகிறது.
நீங்க சும்மா இருங்க சாமி
எனவே, இனிமேல் தமிழர் ஆதரவு போராட்டங்களில் தயவு செய்து தமிழ் நடிகர்கள், பங்கேற்பதோ, கருத்து தெரிவிப்பதோ கூடாது என்பதே தமிழர்கள் விருப்பம். ஏனெனில் இவர்கள் கருத்து தெரிவித்துவிட்டு பல்டி அடித்து தமிழர்கள் மானத்தை வாங்குவதை விட, வடிவேலு பாணியில் சொன்னால் "ஆணியே புடுங்க வேண்டாம்" என்பதே சரியான நிலைப்பாடாக இருக்கும். இனியாவது, எந்த விஷயத்திலும், நடிகர்கள் கருத்து கூற வேண்டும் என தமிழ் ரசிகர்கள் எதிர்பார்க்காதீர்கள். அது உங்களேயே நாளை வெட்கி தலைகுனிய வைத்துவிடும்.