நமக்கு நாமேவினால் அமளி துமளி: சட்டசபை ஒத்திவைப்பு
சென்னை: சட்டசபையில் இன்று அதிமுக எம்.எல்.ஏ. குணசேகரன் பேசும்போது, நமக்கு நாமே பயணம் பற்றி பேசியதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதோடு ஒருவாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதோடு சட்டசபையும் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டசபை வரலாற்றில் கடந்த 15 நாட்களில் அவை இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் இன்று பேசிய அதிமுக எம்.எல்.ஏ குணசேகரன், நமக்கு நாமே பயணம் என்று கூக்குரல் போட்டவர்கள் கோட்டையைப் பிடிக்க முடியவில்லை என்றார். இதற்கு தி.மு.க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது தி.மு.க. துணை தலைவர் துரைமுருகன் எழுந்து, அதிமுக எம்.எல்.ஏ. நமக்கு நாமே பயணம் பற்றி பேசியதை சபை குறிப்பில் இருந்து நீக்க கோரிக்கை விடுத்தார். திமுகவின் உறுப்பினர்கள் அனைவரும் இதை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
திமுகவினர் மேலும் ஆவேசம் அடைந்தனர். துரைமுருகன் கூறுகையில், நமக்கு நாமே என்ற ஒரு திட்டத்தை முன் வைத்து தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தவர் எங்கள் தலைவர். எனவே அவர் பெயரை குறிப்பிடாமல் பேசினாலும் அது அவரைத்தான் குறிக்கும். எனவே அதிமுக எம்.எல்.ஏ. பேசியதை அனுமதித்தால், திமுக எம்.எல்.ஏ.க்களும் இது போல பேசுவார்கள். சின்ன, சின்ன விஷயங்களுக்கு எல்லாம் இப்படி நடந்து கொண்டால் சபையின் நேரம்தான் வீணாகும் என்றார்.
அதற்கு சபாநாயகர் யார் பெயரையும் குறிப்பிட்டு ஒருமையில் சொல்லி இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்பேன். ஆனால் அவர் அப்படி பேசவில்லை என்று கூறினார். அப்போது சட்டசபைக்குள் மு.க.ஸ்டாலின் வேகமாக வந்தார்.
நமக்கு நாமே திட்டம் பற்றி அதிமுக எம்.எல்.ஏ. பேசியதற்கு உள்ளபடியே நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஏன் என்றால் இந்த பயணம் தமிழ்நாடு முழுவதும் எந்த அளவுக்கு பிரபலம் அடைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுக பொதுக்குழுவில் கூட பேசியுள்ளனர் என்றார்
உடனே சபாநாயகர் முதல்வர் பற்றி மு.க. ஸ்டாலின் பேசியது சபை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது. முதல்வர் அவ்வாறு பேசவில்லை என்றார்.
அவை முன்னவர் ஓபன்னீர்செல்வம், தேவை இல்லாமல் அதிமுக பொதுக்குழு பற்றி எதிர்க்கட்சித் தலைவர் பேசி உள்ளார். அதிமுக பொதுக்குழுவில் பேசியது எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றார்.
எதிர்க்கட்சி தலைவர் முதல்வர் பற்றி பேசியதை இங்கு பதிவு செய்ய முடியாது என்று சபாநாயகர் கூறினார்.
உடனே திமுக எம்.எல்.ஏ.க்கள் எழுந்து சபாநாயகருக்கு எதிராக முழக்கமிட்டனர். ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று சபாநாயகர் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பேச வாய்ப்பு கேட்டனர். ஆனால் சபாநாயகர் யாருக்கும் பேச வாய்ப்பு தர முடியாது என்றார்.
இதையடுத்து திமுக எம்.எல்.ஏ.க்கள் இருக்கைகளில் உட்காராமல் நின்று கொண்டே முழக்கமிட்டனர்.
உடனே திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் வெளியேற்ற சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். உடனே மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அவரவர் இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.
ஆனாலும் சபை காவலர்கள் நான்கு புற வாசல் வழியாக சபைக்குள் வந்தனர். முதலில் மு.க.ஸ்டாலினை குண்டுகட்டாக தூக்கிவெளியில் கொண்டு வந்து தரையில் ஸ்டாலினை உட்கார வைத்தனர்.
அதன் பிறகு துரைமுருகனையும் குண்டுகட்டாக தூக்கி வந்து ஸ்டாலின் அருகே இறக்கி வைத்தனர். இப்படி 88 பேரையும் வெளியேற்றினர்.
வெளியே வந்த தி.மு.க உறுப்பினர்கள் 'காப்பாற்று... காப்பாற்று ...ஜனநாயகத்தை காப்பாற்று' என்று அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
அதன்பிறகு அவை முன்னவர் ஓ. பன்னீர் செல்வம் தி.மு.க. உறுப்பினர்களை ஒருவாரம் சஸ்பெண்டு செய்வதற்கான தீர்மானத்தை கொண்டு வந்தார். அது நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து தி.மு.க உறுப்பினர்களை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். தி.மு.க உறுப்பினர்களின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார்.
இதையடுத்து இன்று சபை நடவடிக்கைகள் முடிவடைவதாகவும், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் விவாதத்துக்கு நாளை பதில் அளிப்பார்கள் என்றும் அறிவித்தார்.
15வது சட்டசபையில் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரில் சட்டசபை இன்று இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி சபை நிகழ்ச்சியை அதிகாரிகளுக்கு ஒளிபரப்பிய விவகாரம் குறித்து சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. இது தொடர்பாக சபாநாயகருடன் திமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திமுக உறுப்பினர்களை மறைமுகமாக 89 வயல்காட்டு பொம்மைகள் என அதிமுக உறுப்பினர் முத்தையா கூறியதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறும் முழக்கமிட்டனர். அமளி நீடித்த நிலையில் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இரங்கல் தீர்மானம் வாசித்து அவை ஒத்திவைக்கப்படுவது வாடிக்கை. ஆனால் அமளி துமளியால் தமிழக சட்டசபை கடந்த 10 நாட்களில் 2வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.