சட்டசபையில் அனல், வெளிநடப்புக்கிடையே 8 மசோதாக்கள் தாக்கல்
தமிழக சட்டசபையில் இன்று 8 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.
சென்னை: தமிழக சட்டசபையில் 8 சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்திருத்த மசோதாவை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர், மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் சட்டசபையில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. அனல் பறக்கும் விவாதங்கள், எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகள், வெளி நடப்புகள் என சுவாரஸ்யமான சம்பவங்கள் தினசரியும் நடைபெற்று வருகின்றன.
3 நாட்கள் விடுமுறைக்கு பின் தமிழக சட்டசபை மீண்டும் கூடியது. இன்றைய கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மானிய கோரிக்கை மீது, விவாதம் நடைபெற உள்ளது. அமைச்சர் ராஜலட்சுமி பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.
முன்னதாக காலையில் எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். நீட் மசோதா தொடர்பாக இன்றைய சட்டசபை கூட்டத்தில் விவாதம் அனல் பறந்தது. திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து 8 மசோதாக்களை நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார் அவை:
1. பாரம்பரிய மீனவர்கள், விசைப்படகு மீனவர்களுக்கான கடல் எல்லைகளை வரையறைக்கும் மசோதா
2. 3 பல்கலைகழகங்களின் துணைவேந்தர் நியமனம் தொடர்பான சட்டத்திருத்த மசோதா
3. தமிழ்நாடு உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலை. துணைவேந்தர் நியமனம் தொடர்பான மசோதா
4. தமிழ்நாடு வேளான் பல்கலை. துணைவேந்தர் நியமனம் தொடர்பான சட்டத்திருத்த மசோதா
5. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. துணைவேந்தர் நியமனம் தொடர்பான மசோதா
6. தமிழ்நாடு மின்தூக்கிகள், ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்திருத்த மசோதா
7. தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சட்ட மசோதா
8. நிதி ஒதுக்களிப்பு சட்ட மசோதா ஆகிய மசோதாக்களை தாக்கல் செய்தார் ஜெயக்குமார்.