பிறந்த நாளும் அதுவுமா, தமிழிசைக்கு செல்போனில் கொலை மிரட்டல்! போலீசார் தீவிர விசாரணை
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பாஜக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு செல்போனில் மர்மநபர் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று தமிழிசைக்கு பிறந்த நாளாகும்.
இது தொடர்பாக கமலாலய வட்டாரத்தினர் கூறுகையில்,தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜனுக்கு நேற்றிரவு 11.30 மணிக்கு அவரின் செல்போன் எண்ணிற்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை எடுத்தார் தமிழிசை. எதிர்முனையில் மர்ம மனிதர் ஒருவர் பெயரை குறிப்பிடாமல் பேசினார்.
அந்த மர்மநபர், " ஏய் தமிழிசை, மோடி எங்கே இருக்கிறார்? சொல்?" என்று கோபத்துடன் மிரட்டும் வகையில் பேசினார். மேலும் அவர் செல்போனில் தொடர்ந்து மிரட்டியபடி பேசிக்கொண்டிருந்தார்.
இதில் அதிர்ச்சியடைந்த தமிழிசை உடனே தனது வழக்கறிஞர் தங்க மணியிடம் மர்ம மனிதன் பேசிய விபரத்தை கூறினார். அவர் அதை விரிவாக எழுதி விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இரவு 12 மணியளவில் சென்று புகார் கொடுத்தார்." என்றனர்.
இது பற்றி விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மிரட்டல் வந்ததை தொடர்ந்து தமிழிசை வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.போலீஸ் ரோந்து வாகனமும் அவரின் வீட்டு அருகே நிறுத்தப்பட்டுள்ளது.
இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு தொடர்பாக பிரதமர் மோடி எடுத்த நிலைப்பாட்டை தமிழிசை சௌந்தரராஜன் ஆதரித்து பேசி வருவதால் அது தொடர்பாக மிரட்டல் வந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
இது தொடர்பாக போனில் பேசிய மர்ம மனிதனை கண்டுபிடிக்க போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த மிரட்டல் விவகாரம் பாஜக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.