தரம் குறைந்த மருந்துகள்.... தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு கொத்து கொத்தாக மடியும் உயிர்கள்
டெங்கு காய்ச்சல் காரணமான தமிழகத்தில் 62 பேர் உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தரம் குறைவாக இருப்பதால் டெங்குவை பரப்பும் கொசுக்களை ஒழிக்க முடியாமல் தடுமாறி வருகிறது சுகாதாரத்துறை.
சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு கடந்த 6 நாட்களில் மட்டும் 62 பேர் உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
டெங்கு கொசுவை சுனாமி வேகத்தில் அழிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஆனால் டெங்கு கொசு மருந்திலும் ஊழல் செய்கின்றனர் என்ற புகார் எழுந்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சுமார் 12,000 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,150 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பிற்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிகரித்து வருகிறது.
டெங்குவிற்கு மடியும் உயிர்கள்
தமிழ்நாட்டில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துவருகிறோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறி வரும் நிலையில் டெங்குவிற்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
டெங்கு மருந்துகள் தரம் குறைவு
டெங்கு கொசுவை ஒழிக்கும் அபேட் மருந்து ஒரு கிலோ ரூ.1,800க்கு விற்கிறது. இந்த மருந்து கரைசலை ஊற்ற வரும் துப்புரவு ஊழியர்கள் எல்லாம் ஒப்பந்த பணியாளர்கள். அவர்கள் வீடுதோறும் மருந்து விட வரும்போது மக்களிடம் பணம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. மருந்து அடிக்கிற வீட்டிற்கும் அபேட் மருந்துக்கு பதில் பிளிச்சிங் பவுடரை கலந்து ஊற்றிவிடுகின்றனர்.
ஏடிஸ் கொசுக்களின் வாழ்நாள் அதிகரிப்பு
இதனால் ஏடிஸ் கொசுக்கள் சாகாமல் உயிர் பிழைத்து விடுகின்றன. அதோடு கொசுக்கள் தனது வாழ்நாளை அதிகரித்து கொண்டு விட்டனவாம். 'ஏடிஸ் கொசு வாழ்நாள் 21 நாளாக இருந்தது. தரம் குறைந்த மருந்துகளை தெளிப்பதால் டெங்கு கொசுக்கள் தன் வாழ்நாளை தற்போது 40 நாட்களாக மாற்றிக் கொண்டுள்ளதாக ஒரு மாதத்திற்கு முன்பு ஆய்வு செய்து கூறியுள்ளது ஐசிஎம் ஆர் மையம்.
அதிகரிக்கும் மரணங்கள்
சேலம் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு வாரத்தில் 16 பேர் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. உயிர்களை குடிக்கும் டெங்கு கொசுக்களை போர்க்கால அடிப்படையில் அழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.