ஏழை மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு: தனியார் பள்ளிகள் சம்மதம்
சென்னை: நடப்பு கல்வியாண்டு சேர்க்கையில் 25% ஏழை மாணவர்களுக்கு வழங்க தனியார் பள்ளிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. ஏழை மாணவர்களை சேர்க்க மே 18ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் மாநில மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் பிச்சை பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த, கடந்த 2 வருடங்களாக நிதியுதவி அளிக்காததால், பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் எடுத்துரைத்தனர்.
மேலும் அரசு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்காததால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக விளக்கம் அளித்த மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர், மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை இதுவரை வழங்கவில்லை என்று தெரிவித்தார்.
இருப்பினும் இந்த திட்டத்திற்கு வேண்டிய நிலுவைத் தொகை 3 மாதங்களில் வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். இதனால் ஏழை மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீட்டை தனியார் பள்ளிகள் தொடர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், நடப்பு கல்வியாண்டு சேர்க்கையில் 25 விழுக்காட்டை ஏழை மாணவர்களுக்கு வழங்க தனியார் பள்ளிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.
இதையடுத்து சுயநிதி பள்ளிகளில் ஏழை மாணவரை சேர்க்க மே 18ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் அந்தந்த பள்ளியில் மட்டுமின்றி கல்வித்துறை அலுவலகத்திலும் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications